வெற்றி இலக்கு 200; வேட்பாளர் கணக்கில் 109 தி.மு.க.,வில் மேலும் 37 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு
வெற்றி இலக்கு 200; வேட்பாளர் கணக்கில் 109 தி.மு.க.,வில் மேலும் 37 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு
UPDATED : நவ 23, 2024 07:50 AM
ADDED : நவ 22, 2024 07:40 PM

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், '200 தொகுதிகளில் வெற்றி' என்ற இலக்கை முன்வைத்து, தி.மு.க., பணிகளை துவக்கி உள்ளது. அதற்காக தற்போதுள்ள, 72 மாவட்டச் செயலர்களுடன், கூடுதலாக, 37 பேரை நியமிக்க, கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அறிவாலயத்தில், சமீபத்தில் நடந்தது. அதில், கட்சி மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை, சீரமைப்பு பணிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலர்களின் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில், இரண்டு சட்டசபை தொகுதிக்கு, ஒரு மாவட்டச் செயலரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும், 'பென்' நிறுவனம், துணை முதல்வர் உதயநிதி, உளவுத் துறை ஆகியவற்றின் சார்பில், தலா ஒரு குழு என, மூன்று குழுக்கள் தனித்தனியே, மாவட்டச் செயலர்கள் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. பணி முடிந்ததும், மூன்றையும் ஒருங்கிணைத்து தகுதியானவர்களை, ஸ்டாலின் மற்றும் உதயநிதி, தேர்வு செய்ய உள்ளனர்.
புதிய மாவட்டச் செயலர்களாக, இளைஞர்கள் அதிகம் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது தி.மு.க.,வில், 72 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். கூடுதலாக, 37 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கட்சி அமைப்பு ரீதியாக, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டம் என பிரிக்கப்பட உள்ளதால், புதிதாக, 37 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருநெல்வேலி, தென்காசி, தேனி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்டங்களில், ஏற்கனவே இரண்டு தொகுதிகளுக்கு, ஒரு மாவட்டச் செயலர் உள்ளனர்.
எனவே, இந்த மாவட்டங்கள் பிரிக்கப்படாது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற அடிப்படையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, 27 மாவட்டங்கள் பிரிக்கப்பட உள்ளன. தற்போதுள்ள மாவட்டச் செயலர்களில், 80 வயதுக்கு மேல் இருவர்; 71 முதல் 80 வயது வரை 11 பேர்; 61 முதல் 70 வயது வரை, 26 பேர்; 51 முதல் 60 வயது வரை 22 பேர்; 41 முதல் 50 வயது வரை 10 பேர்; 31 முதல் 40 வயது வரை ஒருவர் என, இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் வயது முதிர்ந்த மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக இளைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய திட்டத்தின்படி, 109 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்படும்போது, அவர்கள் அனைவரும் வேட்பாளராக இருப்பர்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 200 தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற வியூகம் அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியது போக, மீதமுள்ள தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டால், மாவட்டச் செயலர்களே வேட்பாளர்களாக களமிறங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
ஒரு லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் என்றால், அதில் இரண்டு தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க, செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு தொகுதிகளில், இரண்டு மாவட்ட செயலர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதன் வழியாக, வெற்றியை சுலபமாக பெற முடியும் என, கட்சி தலைமை நம்புகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

