அலைபேசியில் பேசவே அலறும் போலீசார்; வரிசைகட்டி வரும் வீடியோக்களால் பீதி
அலைபேசியில் பேசவே அலறும் போலீசார்; வரிசைகட்டி வரும் வீடியோக்களால் பீதி
UPDATED : ஜூலை 08, 2025 06:41 AM
ADDED : ஜூலை 08, 2025 04:59 AM

திருப்புவனம்: தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அஜித்குமார் கொலை வழக்கை அடுத்து போலீசார் விசாரணைக்கு செல்வது  மற்றும் அலைபேசி பயன்பாட்டை  தவிர்த்து வருகின்றனர். அடுத்தடுத்து பழைய சம்பவ வீடியோக்கள் வெளியவதால் போலீசார் பீதியில் உள்ளனர்.
திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு, ஆனந்த், ஆகிய போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி., ஆஷிஷ்ராவத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார், டி.எஸ்.பி.,எஸ்.பி., புகார்தாரர் நிகிதா உள்ளிட்டோர் யார் யாரிடம் பேசினார்கள், இச்சம்பவத்திற்கு நெருக்கடி கொடுத்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் பயன்படுத்திய அலைபேசி பதிவுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. போலீசாரை பொருத்தமட்டிலும், காவல்துறை சார்பாக வழங்கப்பட்ட சிம்கார்டு, சொந்த பயன்பாட்டிற்கு ஒரு சிம்கார்டு, உறவினர்களுக்கு ஒரு சிம்கார்டு என மூன்று எண்கள் பயன்படுத்துவார்கள், உயரதிகாரிகள் நான்கு அலைபேசி எண் கூட பயன்பாட்டில் வைத்திருப்பது வழக்கம்.
இவை அனைத்தை பற்றிய தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 8) உயர்நீதிமன்றத்தில் அவை சமர்ப்பிக்கப்படுகின்றன. அலைபேசி பதிவுகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதால் மாவட்டத்தில் எந்த போலீசாரும் அலைபேசியை சரிவர பயன்படுத்துவதில்லை. வழக்கு தொடர்பாக யார் போன் செய்தாலும் நேரில் வந்து கேட்டு கொள்ளுங்கள் என பதிலளிக்கின்றனர்.
யார் போன் செய்தாலும் போலீசார் பீதியுடனேயே உள்ளனர். புகார் கொடுத்தவர்களிடம் நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறும், எதிர் தரப்பிற்கும் முறையாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகவும் சொல்கின்றனர்.
பழைய சம்பவங்கள், பதிவுகள், அதன்மீதான நடவடிக்கைகள் என வரிசைகட்டி வெளியாகி வருவதால் போலீஸ் தரப்பில் ஒருவித பீதி நிலவுகிறது.

