சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் களமிறங்க விஜய் முடிவு
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் களமிறங்க விஜய் முடிவு
ADDED : மார் 12, 2026 06:48 AM

- நமது நிருபர் -
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம், முதல்கட்டமாக 60 வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பங்கேற்ற வேட்பாளர்களில் சிலர், தகுதி படைத்தவர்கள் இல்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் நிலவுகிறது.
எடுத்துக்காட்டாக, தென்சென்னை மேற்கு மாவட்ட செயலர் சபரிநாதன், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றிய அவர், விஜயின் டிரைவர் ராஜேந்திரனின் மகன்.
விஜய் பிறந்து வளர்ந்த பகுதி என்பதால், விருகம்பாக்கம் தொகுதியில் அவரே போட்டியிட வேண்டும் என, 90 சதவீத நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், சபரிநாதனை அவர் தேர்வு செய்திருப்பதை, கட்சியின் வட்டச்செயலர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில், கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் 14 சதவீதம் உள்ளன. அவர்களில் 44,௦௦௦ பேர், த.வெ.க., உறுப்பினர்களாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த 44,௦௦௦ பேரின் ஒட்டுமொத்த ஆதரவும் கிடைத்தாலே எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என விஜய் தரப்பில் நம்புகின்றனர். அதன் காரணமாகவே, அந்த தொகுதியில் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால், அவரை எதிர்த்து, தி.மு.க., இளைஞரணி நிர்வாகி ஜோயலை நிறுத்த, துணை முதல்வர் உதயநிதி திட்டமிட்டுள்ளார். அங்குள்ள கிறிஸ்துவ நாடார் சமுதாய ஓட்டுகளை, அவர் கணிசமாக பிரிப்பார் என்பதால், தி.மு.க., தரப்பில் அந்த வியூகம் வகுக்கப்படுகிறது.
த.வெ.க.,வின் முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பதால், ஒரு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து விடக்கூடாது என்பதற்காக, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதியில், வெள்ளாளர் சமுதாயத்திற்கு, 50,000 ஓட்டுகள் உள்ளன. தலித் கிறிஸ்துவர் ஓட்டுகளும் கணிசமாக உள்ளதால், அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என, விஜய் கருதுவதாக த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இரு தொகுதிகளிலும் இருக்கும் கிறிஸ்துவ ஓட்டுகளை முழுமையாக நம்பி, விஜய் களமிறங்க முடிவெடுத்திருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

