'தேர்தலுக்கு பின் மீண்டும் விஜய் நடிக்க சென்று விடுவார்': அர்ஜூன் சம்பத் ஆரூடம்
'தேர்தலுக்கு பின் மீண்டும் விஜய் நடிக்க சென்று விடுவார்': அர்ஜூன் சம்பத் ஆரூடம்
ADDED : பிப் 27, 2026 05:47 AM

தஞ்சாவூர்: 'சட்டசபை தேர்தலுக்குப்பிறகு, நடிகர் விஜய், மீண்டும் சினிமாவில் நடிக்க சென்று விடுவார்' என ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஹிந்து மக்கள் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும், தேர்தல் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 15ல், சென்னையில், 'தமிழ், தமிழர், தமிழகம் மீட்பு' மாநாட்டினை நடத்த உள்ளோம். எஸ்.ஐ.ஆர்., பணிகளை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. ஆனால், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் கமிஷன் சிறப்பாக செய்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தையும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். இதை, தேர்தல் கமிஷனும், நீதிமன்றமும் தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில், தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீச தொடங்கி உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இந்த கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளோம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடவில்லை. அவரை நம்பி இளைஞர்கள் ஏமாறக்கூடாது. விஜய்க்கு ரசிகர்கள் மீது அக்கறை கிடையாது. 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் டெபாசிட் இழக்கும். சட்டசபை தேர்தலுக்குப்பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்று விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

