இந்தியாவிலேயே சுற்றுலா செல்லுங்கள்; திருமணங்களை இங்கேயே நடத்துங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்தியாவிலேயே சுற்றுலா செல்லுங்கள்; திருமணங்களை இங்கேயே நடத்துங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
ADDED : செப் 02, 2026 05:04 AM

புதுடில்லி: ''சுதேசி பொருட்களையே இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும். உள்நாட்டிலேயே சுற்றுலா செல்ல வேண்டும்; திருமணங்களையும் நம் நாட்டிலேயே நடத்த வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
நடப்பு, 2026 - -27ம் நிதியாண்டின் ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, ரிசர்வ் வங்கியின், 7 சதவீத கணிப்பை விட அதிகம். இதன் மூலம், உலகின் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக, நம் நாடு உள்ளது.
இதை குறிப்பிட்டு, சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட வீடியோ செய்தி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் ஜி.டி.பி., 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு நாட்டு மக்களே காரணம். இது, நாட்டின் கூட்டு உறுதியையும், கடின உழைப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனைக்காக அயராது உழைத்த அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
உலகமே போரில் மூழ்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் போர் குறித்த செய்திகளே வருகின்றன. மேலும், நெருக்கடிகளால் உலகம் சூழப்பட்டுள்ளது.
வினியோகத் தொடர் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. 2020ல் கொரோனா காலத்திலிருந்து இன்று வரை, உலகில் எங்குமே நிலைத்தன்மை காணப்படவில்லை. அப்படியிருந்தும், நம் நாடு அதிவேகமாக முன்னேறி வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த, உள்நாட்டிலேயே இந்தியர்கள் சுற்றுலா செல்ல வேண்டும். திருமணங்களையும் நம் நாட்டிலேயே நடத்த வேண்டும்.
அத்தியாவசிய தேவை இல்லையென்றால், தங்கம் வாங்குவதை கூட தவிர்க்க வேண்டும். சுதேசி, தற்சார்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைக்க உதவும்.
நாட்டின், 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நம் இளைஞர்களிடம் ஒரு வளர்ந்த இந்தியாவை ஒப்படைப்போம் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர், விரக்தியால் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவற்றை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
