ADDED : பிப் 19, 2024 05:20 AM

லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், ஏழு தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், தேனி தவிர்த்து, 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தி.மு.க.,வில், துாத்துக்குடியில் துணை பொதுச்செயலர் கனிமொழி; தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் என, இருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஆலோசனை
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 173 தொகுதிகளில், தி.மு.க., சார்பில், 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்; ஆறு பேர் வெற்றி பெற்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், துாத்துக்குடி, சேலம், ராமநாதபுரம், மதுரை, தர்மபுரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய ஏழு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இளைஞரணிக்கும் உண்டு
மதுரை தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதில், கட்சி நிர்வாகிகளின் மனைவி, மகள் என புதுமுகங்களும் இடம் பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், இளைஞரணியைச் சேர்ந்தோருக்கும், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது.
- நமது நிருபர் -

