தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்! அமித் ஷா சபதம்
தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்! அமித் ஷா சபதம்
ADDED : ஜன 05, 2026 06:17 AM

சென்னை: ''தமிழகத்தில் எப்பாடுபட்டாவது தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
'தமிழகம் தலை நிமிர, தமிழனின் நடைபயணம்' என்ற பெயரில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரையின் நிறைவு விழா பொதுக் கூட்டம், புதுக்கோட்டையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். தனி விமானம் வாயிலாக திருச்சி வந்த அவர், சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்றார்.
புதுக்கோட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பியுஸ் கோயல், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: தமிழகத்தில் வரும் ஏப்ரலில் தே.ஜ., கூட்டணி ஆட்சி மலரும். வரும் நாட்களில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும், இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் இணைந்து, வலுவான கூட்டணியை அமைக்கப் போகிறோம். எப்பாடுபட்டாவது தி.மு.க., ஆட்சியை ஒழித்தே தீருவோம்.
நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் நிறைந்த ஆட்சி என்றால், அது தி.மு.க., ஆட்சி தான். பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மகன் உதயநிதியை முதல்வராக்குவது மட்டுமே, முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான நேரம் வந்து விட்டது. ஸ்டாலின் கனவு பலிக்காது.
தே.ஜ., கூட்டணியை, தமிழுக்கு எதிரானது என பிரசாரம் செய்கின்றனர். ஆனால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வில், தமிழை அறிமுகம் செய்தது, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தான். உ.பி., மாநிலம், வாரணாசி பல்கலையில், பாரதி பெயரால் இருக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருக்குறளை, 13 மொழிகளில் மோடி அரசு மொழியாக்கம் செய்துள்ளது.
தமிழில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வசதிகளை, மோடி ஏற்படுத்தி கொடுத்துள்ளார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அமர்த்தி உள்ளார்.
தி.மு.க., அமைச்சர் ஒருவர், சிறைக்கு சென்ற பின்னும், 248 நாட்கள் பதவியில் தொடர்ந்தார். ஒரு அமைச்சர், அரசு பணிக்கு பணம் வாங்கிய ஊழலில் சிக்கியுள்ளார். ஒரு அமைச்சர், கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். மணல் அள்ளும் ஊழலில், ஒரு அமைச்சர் சிக்கியுள்ளார். நிலக்கரி ஊழலில் ஒரு அமைச்சர் பெயரும், 6,000 கோடி ரூபாய் ஊழலில் மற்றொரு அமைச்சர் பெயரும் உள்ளது.
இத்தனை ஊழல் நிறைந்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகம் வளர்ச்சி காண முடியுமா? தமிழகத்தில் ஏதாவது பணி செய்ய வேண்டும் என்றால், 'முதலில் 20 சதவீதம் கமிஷன் கொடுங்கள்' என்கின்றனர். 'டாஸ்மாக்' வருமானம் மற்றும் கடனை நம்பியே, தமிழக அரசின் நிதி நிலைமை உள்ளது.
துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரியைகள் போராடினால், கைது செய்யப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் போராடினால், உடனுக்குடன் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். விவசாயிகளை கூட விட்டு வைக்கவில்லை.

மற்ற மாநிலங்களின் நச்சு கழிவுகளை கொட்டும் குப்பை கிடங்காக தமிழகத்தை தி.மு.க., அரசு மாற்றியுள்ளது. தமிழகத்தில் ஹிந்துக்களுக்கும், அவர்களின் சமய நம்பிக்கைக்கும் முடிவு கட்டும் வகையில் தி.மு.க., அரசு செயல்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின்போது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஹிந்துக்கள் ஊர்வலம் நடத்தினால், தடை விதிக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தின் மாண்பை, முதல்வர் ஸ்டாலின் குறைத்துள்ளார்; ஹிந்துக்களின் சமய உரிமையை பறித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு வரை, மத்திய ஆட்சியில், 1 லட்சத்து 53,000 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்தது. மோடி அரசு, 2014 முதல் 2024 வரை, 11 லட்சம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
கடந்த 2024ல் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், ஒடிஷாவில் பா.ஜ., ஆட்சி, ஆந்திராவில் தே.ஜ., கூட்டணி ஆட்சி, மஹாராஷ்டிராவில் தே.ஜ., கூட்டணி ஆட்சி, 27 ஆண்டுகளுக்கு பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி என வெற்றி தொடருகிறது.
சமீபத்தில் பீஹாரில் வெற்றி பெற்றோம். அடுத்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற உறுதி எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன், ஜார்ஜ் கோட்டையை அடைவோம். இவ்வாறு அமித் ஷா பேசினார்.

