தமிழகத்தில் நிலச்சரிவு தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? விஞ்ஞானிகள், கட்டுமான பொறியாளர்கள் 'அலர்ட்'
தமிழகத்தில் நிலச்சரிவு தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? விஞ்ஞானிகள், கட்டுமான பொறியாளர்கள் 'அலர்ட்'
ADDED : ஆக 03, 2024 03:38 AM

கோவை : கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு, தமிழகத்தின் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை, சிறுவாணி மலைப்பகுதிகளிலும் ஏற்படலாம் என்று, எச்சரித்துள்ளனர் காலநிலை ஆய்வாளர்கள் மற்றும் கட்டுமான பொறியாளர்கள்.
இது குறித்து, கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்( காட்சியா ) தலைவர் விஜயகுமார் கூறியதாவது:
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன், இது போன்ற பேரிடர் ஏதும்இல்லை. அதற்கு சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற்போல் வீடுகளை அமைத்துக்கொண்ட, தோடர்களே ஒரு முன் உதாரணம்.
மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் வசிக்கும் நிலப்பரப்புக்கு ஏற்ப காரைச்சுவர் ஏற்படுத்தி சுண்ணாம்புக்கலவையில் பூச்சு ஏற்படுத்தி வீடு அமைத்தனர்.
வயநாடு செம்மண் பூமி. அங்கு கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது. மண்ணின் தாங்கும் திறனுக்கு தகுந்தாற்போல் கட்டுமானங்களை நிறுவ வேண்டும் என்று அரசு, மலையிடப் பாதுகாப்புக்குழு எச்சரித்தும், அதை மீறி பல கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதுவே நிலச்சரிவுக்கு காரணம்.
மழைநீரை சரியான பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசு விதிமுறைகளை பின்பற்றினால், இது போன்ற சேதங்களை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
இயற்கை வாழ வேண்டும்
தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான பாலசுப்ரமணியன் கூறியதாவது:
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு காரணம் காலநிலை மாற்றம் தான். தொழிற்புரட்சியால் பசுமை வாயுக்களான கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ், குளோரோ ப்ளூரோ கார்பன் ஆகிய வாயுக்கள் வளிமண்டலத்தின் கொள்ளளவுக்கும் அதிகமாக, பூமியிலிருந்து மேலே சென்று வளி மண்டலத்தை அடைத்து விட்டது.
இதனால் சூரியஒளி மட்டும் ஊடுருவி, பூமிக்கு கீழே வரும். ஆனால் திரும்ப மேலே செல்ல முடிவதில்லை. அதனால் இந்த வாயுக்கள், வளிமண்டலத்தை போர்வை போல் போர்த்திக்கொண்டன. அதுவேகுளோபல் வார்மிங்.
இதனால் உலக அளவில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 செல்சியஸ் அதிகரித்தது. பூமி வெப்பமடைந்ததால் அனைத்து பகுதிகளிலும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. மழைபெய்யும் நாட்கள் குறைந்து, மழை அளவு அதிகரித்தது.
கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் தமிழகத்தில் ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய 950 மி.மீ.,மழை ஒரே நாளில் பெய்தது. அதே நிலை தான் வயநாட்டில் நடந்துள்ளது. இரண்டு நாளில், 572 மி.மீ.,மழை பெய்தது. இதனால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவுக்கு மலைப்பகுதியின் சரிவு விகிதம் எவ்வளவோ, அதற்கேற்றாற் போல் அங்கு விவசாயம் மற்றும் கட்டுமானங்கள் மேற்கொள்ள வேண்டும். அதை மீறியதும் நிலச்சரிவு ஏற்பட காரணம்.மலைப்பகுதியிலுள்ள மண்ணின் தன்மை என்ன என்பது குறித்து, ஆய்வு செய்து அதற்கேற்ப கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
வயநாட்டின் பெரும்பாலான பகுதி சுற்றுலாமையமாக இருப்பதாலும் கட்டட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததும், பேரழிவுக்கு வழிவகுத்திருந்தது.
மக்கள் இயற்கையோடு ஒன்றி பயணிக்க வேண்டும். நீலகிரி, கொடைக்கானல், கோவையிலுள்ள வால்பாறை, சிறுவாணி மற்றும் வெள்ளிங்கிரி மலைப்பகுதிகளில் மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், இவ்வளவு எண்ணிக்கையில் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.
நீர்வழிப்பாதைகளை எச்சூழலிலும் தடுக்கக்கூடாது. மனிதன் இயற்கையை வாழவிடவேண்டும். அப்போது தான் இயற்கை மனிதனை வாழ வழிவிடும். இவ்வாறு, பாலசுப்ரமணியன் கூறினார்.