ADDED : ஏப் 19, 2026 04:34 AM

புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், மேற்கு வங்கத்தை தவிர, தமிழகம் உட்பட தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்துவிட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றார். 'முதலில், எஸ்.ஐ.ஆர்., பணியை நிறுத்த வேண்டும்' என்றார். ஆனால் நீதிமன்றம் மறுத்து விட்டது. பின், தேர்தல் கமிஷனால் நிராகரிக்கப்பட்ட வாக்காளர்கள் முறையிடவே, தீர்ப்பாயங்களை நியமித்தது நீதிமன்றம். இரு கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியால் யாருக்கு லாபம் என ஒரு விவாதம் கிளம்பியுள்ளது. முதலில், எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்த்த மம்தா, இப்போது அமைதியாகி விட்டாராம். 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்டுள்ளன. இதில், ஹிந்துக்கள் எத்தனை பேர், முஸ்லிம்கள் எத்தனை பேர் என்ற விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை. ஆனால், நீக்கப்பட்ட வாக்காளர்களில், 63 சதவீத ஹிந்துக்கள், 35 சதவீத முஸ்லிம்கள் என, திரிணமுல் காங்., சொல்கிறது. 'இது, பா.ஜ.,வை பெரிதும் பாதிக்கும்' என்கிறது மம்தாவின் திரிணமுல். 'திரிணமுல் காங்கிரசுக்கு எப்படி இந்த 'டேட்டா' கிடைத்தது?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., பணியின் முதல் கட்டத்தில், 58 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில், 44 லட்சம் ஹிந்துக்கள், 10.34 லட்சம் முஸ்லிம்கள். இரண்டாவது கட்டத்தில், 5.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில், 5.28 லட்சம் ஹிந்துக்கள், 13,000 முஸ்லிம்கள். கடைசி கட்டத்தில், 27 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில், 10.75 லட்சம் முஸ்லிம்கள், 8.35 லட்சம் ஹிந்துக்கள். 'இதை மத ரீதியாக பார்க்கக்கூடாது; பிரிவு முறையில் பார்க்க வேண்டும்' என்கின்றனர். எது எப்படியோ... நாட்டின் தேர்தலில் சமயமும், ஜாதியும் முக்கியம். அது, சாகா வரம் பெற்றது என்பது நிதர்சனமான உண்மை.
