ADDED : நவ 25, 2025 04:28 AM

டெல்டா விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்தவர்,' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு பதிலளித்து பேட்டியளித்த பழனிசாமி, 'கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் ரோடு போட்டு நடந்து சென்றவருக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்' என கேள்வி எழுப்பியுள்ளார். இருவரின் கருத்துகளும் இங்கே: ஸ்டாலின் அறிக்கை:
நீர்நிலைகள் நிறைந்து, விவசாயிகள் கடும் உழைப்பை செலுத்தி, நெடுவயல் நிறைய கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து காத்திருந்தோம். ஆனால், அதிக மழையால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, 'சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே, ஏன் அறுவடை செய்யவில்லை?' என அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சை துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி.
நெல்லின் ஈரப்பதத்தை, 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்; அவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட விவசாயிகள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்க துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத்துரோகிகள் எங்கே?
போராடும் எங்களுக்கு துணை நிற்க, யாரிடம் அனுமதி பெற வேண்டும் என, பழனிசாமி காத்திருக்கிறார்? தமிழக மக்களின் சுயமரியாதையையும், தமிழக உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையை சற்று நிமிர்த்தி, நம் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கச் சொல்வாரா? விவசாயிகள் நலன் காக்க, தமிழகம் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான், இத்தனையும் கேட்கிறேன்.
ரத்தத்தை வியர்வையாக சிந்தி, விவசாயிகள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது.
பழனிசாமி பேட்டி:
டெல்டாவில், 6 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டதால், அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு, விரைந்து, நேரடி கொள்முதல் நிலையத்தை துவக்கி இருந்தால், பிரச்னை ஏற்பட்டிருக்காது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நான் நேரில் சென்று சந்தித்தேன். ஆனால், முதல்வராக இருக்கும் ஸ்டாலின், திரைப்படம் பார்க்க சென்று விட்டார். அழுகிய நெல் மணிகளை 'ட்ரேயில்' வைத்து பார்வையிட்டார்.
என்னை, 'பச்சை துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர்' என ஸ்டாலின் விமர்சிக்கிறார். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் ரோடு போட்டு பார்வையிட்ட ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?
அ.தி.மு.க., ஆட்சியில் தான், டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். ஒரே ஆண்டில் இரண்டு முறை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினோம். ஆனால், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, டெல்டாவில், 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்' போட்டனர்.
மத்திய வேளாண் சட்டத்தால், தமிழக விவசாயிகளுக்க என்ன பாதிப்பு என்பதை ஸ்டாலின் விளக்கினால், நான் பதில் கூறுகிறேன்.
நெல் ஈரப்பதம் விவகாரத்தில், மத்திய அரசு எதற்காக நிராகரித்தது என விளக்கம் அளித்தால் மட்டுமே அதை பற்றி கூற முடியும்.
நெல் ஈரப்பதம், 22 சதவீதம் அதிகரிக்க கோரி, அ.தி.மு.க., சார்பில் மத்திய அரசுக்கு ஏற்கனவே சொல்லி விட்டோம்.
- நமது நிருபர் - '

