ADDED : டிச 30, 2024 12:43 AM

சென்னை: அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், 'யார் அந்த சார்?' என்ற தலைப்பில், தமிழகம் முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
அதிர்வலை
அத்துடன், இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், சம்பவம் நடந்த போது, அந்த நபர் வேறு ஒருவரிடம் மொபைல் போனில் பேசியதாகவும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அவரை 'சார்' என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியானது.
அதைத்தொடர்ந்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினர், 'அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், 'யார் அந்த சார்' என்ற கேள்வியுடன், 'சேவ் அவர் டாட்டர்ஸ்' என்ற ஹேஷ்டேக் உடன், தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், கோவை சத்யன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர், தி.மு.க., உறுப்பினரே இல்லை என அமைச்சர் ரகுபதி வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.
அவர் சைதாப்பேட்டை கிழக்கு மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பது ஊரறிந்த விஷயம். அவரது சமூக வலைதள கணக்கை, இரவோடு இரவாக முடக்கியது ஏன்?
இக்குற்ற சம்பவத்தில், இரண்டாவது நபர் குறித்து தகவல் கொடுக்காமல், காவல்துறை மவுனம் காப்பது ஏன்? அனைத்து 'சிசிடிவி'க்களும் வேலை செய்யவில்லை என்பது யாரை காப்பாற்ற.
இரண்டாவது நபர் வட்டச்செயலர் பொறுப்பில் இருப்பதாக கூறுவது உண்மையா? யாரை காப்பாற்ற இந்த நாடகம் நடக்கிறது.
யாரை காப்பாற்ற காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அறவழியில் போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினரை கைது செய்ததுடன், ஊடகத்தில் பேசக்கூடாது என்று தடுப்பது ஏன்?
அ.தி.மு.க., களத்தில் இருப்பதால் ஸ்டாலின் பயத்தில் உள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஞானசேகரன், தி.மு.க., நிர்வாகி என அனைவருக்கும் தெரிந்த பிறகும், பொய் பேசுவதற்கான காரணம் என்ன? உண்மை பேசுவதற்கான துணிவு எப்போது வரும் என்பது கேள்வியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போலீஸ் நடவடிக்கை
'யார் அந்த சார்?' தலைப்பில், கரூர் - கோவை சாலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக சுவரில், போஸ்டர் ஒட்டிய கூலி தொழிலாளர்கள் செல்வராகவன், 64, மணி, 64, மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்; போஸ்டரையும் கிழித்தெறிந்தனர்.