தி.மு.க., பொதுச்செயலர் பதவி யாருக்கு? டி.ஆர்.பாலு - ஆ.ராஜா இடையே போட்டி
தி.மு.க., பொதுச்செயலர் பதவி யாருக்கு? டி.ஆர்.பாலு - ஆ.ராஜா இடையே போட்டி
ADDED : ஜூன் 28, 2025 02:40 AM

பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், தி.மு.க.,வில் டி.ஆர்.பாலு - ஆ.ராஜா இடையில் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், துணை பொதுச்செயலர் பதவி உதயநிதிக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் தி.மு.க.,வில் நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்த, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
அதன்படி, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இளைஞரணி செயலராக உள்ள உதயநிதியை, துணை பொதுச்செயலராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கவுரவப்படுத்த திட்டம்
அதற்கு வசதியாக, தலைமை கழக நிர்வாகிகள் மட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. கட்சியில் மூத்தவராக உள்ள அமைச்சர் துரைமுருகனிடமிருந்து பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட உள்ளது. உடல் நலம் காரணமாக, கட்சி பணிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்க ஆலோசிக்கப்படுகிறது.
அதையடுத்து, அப்பொறுப்பை யாருக்கு வழங்குவது என்ற கேள்வி, ஆளுங்கட்சியில் எழுந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா இருவருக்கும் இடையில், இப்பதவியை பிடிக்க போட்டி ஏற்பட்டுள்ளது.
தற்போது டி.ஆர்.பாலு பொருளாளராக இருக்கிறார். அவர் பொதுச்செயலர் ஆக்கப்பட்டால், பொருளாளர் பதவிக்கு புதியவரை நியமிக்க வேண்டும். அதனால், அப்பதவிக்கு மூத்த அமைச்சர் எ.வ.வேலு பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிக்கப்பட்டு உள்ளது. அதிருப்தி அடைந்த அவர், சில நாட்கள் அறிவாலயம் வராமல் இருந்தார்.
கட்சியின் பொதுச்செயலர் பதவியும் பறிக்கப்பட்டால், அவர் மேலும் அதிருப்தியடையக்கூடும் என்பதால், கட்சிக்கு தனியாக வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது. அதில், துரைமுருகன், பொன்முடி, பெரியசாமி உள்ளிட்டோரை நியமித்து, கவுரவப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது, கட்சியில் டயனோசர்களாக ஆளுமையுடன் இருக்கும் மூத்தவர்களை ஓரங்கட்டப்படுவது போல் தெரியாமல் இருக்க, வழிகாட்டுக் குழு அமைத்து, அதில் அவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2022ம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்தி, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், முதன்மை செயலர், தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்தாண்டுகள் வரை பதவியில் நீடிக்கலாம்.
அதற்கு இடையில் யாரை மாற்றி, புதியவரை நியமித்தாலும், அவர் பொறுப்பு பொதுச்செயலராக தான் இருப்பார்.
ஆனந்த கண்ணீர்
துணை பொதுச்செயலர் பதவி என்பது நியமன பதவி தான். அதனால், அதற்கு கூடுதலாக ஓரிருவரை நியமிக்க, கட்சி தலைமைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, செப்., 17ல் நடக்கும் தி.மு.க., முப்பெரும் விழாவில், துணை முதல்வர் உதயநிதிக்கு துணை பொதுச்செயலர் பதவி வழங்கும் வாய்ப்பு உள்ளது.
பொதுச்செயலர் பதவியிலிருந்து மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதால், துரைமுருகன் மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் திடீர் ஆர்வம் காட்டி வருகிறார்.
திருப்பத்துார் அரசு விழாவில் முதல்வருடன் பங்கேற்றார். அவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'நம் மூத்த அமைச்சர் துரைமுருகன், ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தின் தளகர்த்தர்' என பாராட்டியுள்ளார்.
முதல்வர் பாராட்டி பேசியதை, தன் ஆதரவாளர்களிடம் கூறி, துரைமுருகன் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.
'என் அரசியல் வாழ்க்கையில், நான் பார்க்காத பதவி இல்லை. இனி எனக்கு பதவி ஆசை இல்லை. ஆனால், கருணாநிதிக்கு ஒரு அன்பழகன் போல், ஸ்டாலினுக்கு நான் துணையாக இறுதி மூச்சு வரை இருக்க வேண்டும். அது தான் என்னுடைய தற்போதைய ஆசை.
'ஆனால், அதற்கு கட்சி தலைமை இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும், கட்சி தலைவர் ஸ்டாலின், என் கோட்டைக்கே வந்து என்னை பெருமைப்படுத்துவது போல பேசிச் சென்றதே, வாழ்நாளில் நான் பெற்ற பேறு' என்று, தன் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -