யாருடன் கூட்டணி? மதில் மேல் பூனைகளாக காத்திருக்கும் பிரேமலதா, தினகரன், பன்னீர்செல்வம்
யாருடன் கூட்டணி? மதில் மேல் பூனைகளாக காத்திருக்கும் பிரேமலதா, தினகரன், பன்னீர்செல்வம்
ADDED : ஜன 17, 2026 05:36 AM

த.வெ.க., தலைவர் விஜய் எடுக்கும் முடிவு தெரிந்த பின், தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 5ம் தேதி தஞ்சாவூரில் நடந்த அ.ம.மு.க., பொதுக்குழுவில், கூட்டணி தொடர்பான முடிவு எடுக்க, பொதுச்செயலர் தினகரனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, த.வெ.க.,வுடன் அ.ம.மு.க., கூட்டணி என்றும், தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இடம் பெறும் என்றும் இரு விதமாக பேசப்படுகிறது.
இதுபோல, தே.மு.தி.க., கூட்டணி நிலைப்பாடு குறித்து, 'கடலுாரில் ஜன., 9ல் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா கூறியிருந்தார். ஆனால், அந்த மாநாட்டில் பேசிய பிரேமலதா, 'ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் இன்னும் கூட்டணியை அறிவிக்காத நிலையில், நாம் மட்டும் ஏன் அறிவிக்க வேண்டும்?' என புதிர் போட்டு ஒதுங்கிக் கொண்டார்.
தனி அணியாகச் செயல்படும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தினகரனும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படும் நிலையில், பன்னீர்செல்வம் யாருடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற கேள்வி நீடித்து வருகிறது.
அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்ல முடியாத பன்னீர்செல்வத்தை, த.வெ.க., கூட்டணியில் சேர்க்க, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், 'தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதத்தில் 30 நாட்கள் இருக்கின்றன. அந்த 30 நாட்களில், ஏதாவது ஒரு நாளில் கூட்டணி குறித்து நல்ல செய்தி வரும்' என பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இப்படி பிரேமலதா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகிய மூவருமே, கூட்டணி முடிவை அறிவிக்காமல், த.வெ.க., முடிவுக்காக மதில் மேல் பூனைகளாக காத்திருக்கின்றனர்.
- நமது நிருபர் -

