ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள்: அ.தி.மு.க.,வில் இழுபறி ஏன்?
ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள்: அ.தி.மு.க.,வில் இழுபறி ஏன்?
UPDATED : மே 31, 2025 07:07 AM
ADDED : மே 31, 2025 03:37 AM

ராஜ்யசபாவில் அங்கீகாரம் பெற ஐந்து எம்.பி.,க்கள் தேவை என்பதால், இம்முறை தே.மு.தி.க., -- பா.ஜ.,வுக்கு பதவிகள் தர அ.தி.மு.க., விரும்பவில்லை. அக்கட்சிகளிடம், இது தொடர்பாக அ.தி.மு.க., சமரசம் செய்து வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
அழுத்தம்
தி.மு.க., சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், ம.நீ.ம., சார்பில் கமலும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். அந்த இருவர் யார் என்பதில்தான், அ.தி.மு.க.,வில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' வேண்டும் என, பொதுச்செயலர் பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எனவே, சமுதாய அடிப்படையில் கட்சிக்கு உழைத்தவர்களுக்கும், தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கும் பதவி வழங்க பழனிசாமி முடிவு செய்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு தற்போதைய நிலையில், ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க முடியாத நிலையிலும் அவர் உள்ளார். அதற்கு காரணம், ராஜ்யசபாவில் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும்.
அதற்கு குறைந்தபட்சம் ஐந்து எம்.பி.,க்கள் தேவை. தற்போது, தம்பிதுரை, சண்முகம், தர்மர் என மூன்று பேர் உள்ளனர்.
இந்த தேர்தல் வாயிலாக இருவரை தேர்வு செய்யும்போது, ஐவர் இடம் பெற்று விடுவர். கட்சிக்கு ராஜ்யசபாவில் அங்கீகாரம் கிடைத்து விடும். இது பற்றி தே.மு.தி.க., - பா.ஜ.,விடம் பேசி, பழனிசாமி சமரசம் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு பின் வரும் ராஜ்யசபா தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என, அவர் உத்தரவாதம் கூறி வருகிறார்.
தற்போது ராஜ்யசபாவில் வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர் சமுதாயத்திற்கு பிரநிதித்துவம் இருப்பதால், நாடார், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர் அல்லது அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க, பழனிசாமி ஆலோசித்து வருகிறார்.
இதுபோன்ற காரணங்களால், அ.தி.மு.க.,வில் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராஜ்யசபா தேர்தலை வைத்து, அ.தி.மு.க.,வில் புது குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் ஐ.டி., அணி நிர்வாகியாக இருக்கும் ராஜ் சத்யன், தனக்கு அந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பதவிக்கு முட்டி மோதும் மற்ற நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட வைப்பதாக, நிர்வாகிகள் பலரும் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜ்யசபாவில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த தர்மர் என்பவர் தற்போது அ.தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார். அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.டி., அணி நிர்வாகி ராஜ்சத்யன் தற்போது எம்.பி., பதவி கேட்டு, பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
எதிர்ப்புக்கொடி
இருந்தபோதும், எப்படி யாவது ராஜ்யசபா எம்.பி.,யாகி விட வேண்டும் என நினைக்கும் ராஜ் சத்யன், இதற்காக உத்தேச பட்டியலில் இருக்கும் பலர் குறித்தும் சமூக வலைதளங்களில் செய்திகள் வரவழைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ராஜ் சத்யனுக்கும் அவர்களுக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலர், ராஜ் சத்யனுக்கு எம்.பி., பதவி வழங்கக்கூடாது என எதிர்ப்புக் கொடி பிடிக்கின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -