காங்கிரசில் இளங்கோவன் ஆதரவாளர்கள் திடீர் ரகசிய கூட்டம் நடத்தியது ஏன்?
காங்கிரசில் இளங்கோவன் ஆதரவாளர்கள் திடீர் ரகசிய கூட்டம் நடத்தியது ஏன்?
ADDED : ஜூலை 22, 2025 03:38 AM

தமிழக காங்கிரசில் அதிருப்தியுடன் இருப்போர், அ.தி.மு.க.,- த.வெ.க., கட்சிகளுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களை ஒருங்கிணைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றவும், சென்னையில் இளங்கோவன் ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த இளங்கோவன், கடந்த ஆண்டு டிச., 14ல் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு பின், இரண்டாவது மகன் சஞ்சய், இடைத்தேர்தலில் போட்டியிட, இளங்கோவன் ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால், தி.மு.க., அத்தொகுதியை காங்கிரசுக்கு விட்டு தராமல், போட்டியிட்டு வெற்றி பெற்றது. இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகம் முழுதும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இளங்கோவனின் ஆதரவாளர்களை, தன் அணியில் சேர்க்க, சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம், சில மாதங்களுக்கு முன், சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் விருந்து வழங்கினார்.
ஆனால், அவர் பின்னால், இளங்கோவன் ஆதரவாளர்கள் அணிவகுக்க விரும்பவில்லை. தமிழக காங்கிரஸ் முன்னாள் பொருளாளரும், தற்போதைய துணைத் தலைவருமான நாசே ராமச்சந்திரன், இளங்கோவனின் நெருக்கமான நண்பர்.
இளங்கோவன் உயிரோடு இருந்தபோது, மாநிலத் தலைவர், எம்.பி., - எம்.எல்.ஏ., போன்ற பதவியை விரும்பாமல் இருந்தார்.
இளங்கோவன் ஆதரவாளர்களான மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் சிலர், அ.தி.மு.க., மற்றும் விஜய் கட்சியில் இணைவதற்கு, துாது அனுப்பி உள்ளனர்.
இதை அறிந்த நாசே ராமச்சந்திரன், துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர், இளங்கோவன் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறாமல் தடுக்க, அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தலைமையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், ரகசிய கூட்டம் நடந்தது. அதில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் எம்.ஜோதி, ரங்கபாஷ்யம், சிவராமன், குலாம், ஏ.ஜி.சிதம்பரம் உட்பட 25 பேர் பங்கேற்றனர்.
அதில், 'இளங்கோவனுக்கு சிலை அமைக்க வேண்டும். தலைவர் பதவியை நாசே ராமச்சந்திரன் அல்லது ஏ.பி.சி.வி. சண்முகத்திற்கு, டில்லி மேலிடத்திடம் கேட்க வேண்டும்.
'இளங்கோவன் தேசிய பேரவை துவக்குவது, வரும் சட்டசபை தேர்தலில் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு, கணிசமான தொகுதிகளை பெறுவது' குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 24ம் தேதி தேசிய பேரவையின் முதல் கூட்டத்தை, சென்னையில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -