ADDED : மார் 08, 2026 04:57 AM

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. 'தி.மு.க.,வை பாடாய்ப்படுத்திய இவரை, ஏன் திடீரென மாற்ற வேண்டும்?' என, கேள்விகள் எழுந்தன. இதற்கு பா.ஜ., வட்டாரங்களில் சொல்லப்படுவது இது தான்.
'கவர்னர் ரவி மீது தி.மு.க.,வுக்கு கடும் வெறுப்பு. இவரை வைத்து அக்கட்சி அரசியல் செய்தது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும், கவர்னரை ஒரு பேசு பொருளாக்க தி.மு.க., திட்டமிட்டது. எனவே தான் அவர் மாற்றப்பட்டார்.
'இது அவருக்கு ஒரு பின்னடைவு என சிலர் சொன்னாலும், அது உண்மையல்ல. மேற்கு வங்கத்திற்கு அவரை மாற்றியது, ரவிக்கு ஒரு பதவி உயர்வு' என, பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது.
ஏன் மேற்கு வங்கம்? அங்கு கவர்னராக இருந்த அனந்த போஸ் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. கேரளாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மேற்கு வங்க பா.ஜ.,வினர் எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும் ஒதுக்கியது இல்லையாம். கவர்னர் மாளிகையிலும், இவருக்கு எதிரான புகார்கள். மேலும், மம்தாவிற்கு எதிராக செயல்படாமல் நெருக்கமாகி விட்டார். இதனால் பதவி விலகும்படி, பா.ஜ., மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
'ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனந்த போஸை விட, ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவி தான், மம்தாவிற்கு சரியான நபர். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சி வன்முறையை கட்டவிழ்த்து விடும். இதை சமாளிக்க ரவி தான் பொருத்தமானவர். அதனால் தான், அனந்த போஸ் மாற்றப்பட்டார்' என, சொல்லப்படுகிறது.

