தி.மு.க.,வுக்கு விரோதமாக பேசும் திருச்சி வேலுசாமி மீது நடவடிக்கையா? கிரிஷ் ஷோடங்கர் மறுப்பு
தி.மு.க.,வுக்கு விரோதமாக பேசும் திருச்சி வேலுசாமி மீது நடவடிக்கையா? கிரிஷ் ஷோடங்கர் மறுப்பு
UPDATED : ஜன 10, 2026 05:57 AM
ADDED : ஜன 10, 2026 05:07 AM

தமிழகத்தில், காங்கிரஸ் --- தி.மு.க., கூட்டணி தொடரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி, தனியார் 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டி:
காங்கிரசின் அடிமட்டத் தொண்டர்கள், தி.மு.க., மீது கோபத்தில் இருக்கின்றனர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல், தி.மு.க., அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகின்றனர். எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக இருப்பவர்கள், ஒருசில பயனாளிகளைத் தவிர, யாரும் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை.
கூட்டணி, தோழமை எனக்கூறி, காங்கிரசை வேரறுக்கும் வேலையைத் தான் தி.மு.க., செய்தது. தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது, நுாற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தெரியும். கூட்டணி விவகாரத்தில், காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க., கூட்டணி கூடாது என்பதாக தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான், காங்கிரசை த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கத் துாண்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சென்னையில் இன்று மாலை, காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் மகாத்மா சீனிவாசன் ஏற்பாட்டில், 'ஜனநாயகன்' பொங்கல் விழா நடக்கிறது. இந்த விழாவில், திருச்சி வேலுசாமி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்த விழா நடத்த, தமிழக காங்கிரஸ் தலைமையின் அனுமதி பெறவில்லை. இதனால், கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்படும் திருச்சி வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையிடம் சிலர் புகார் செய்துள்ளனர்.
தொடர்ந்து, வேலுசாமியை கட்சியை விட்டு நீக்குமாறு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஷோடங்கர் மறுத்து விட்டார்.
தி.மு.க., - காங்கிரஸ் உறவை பிரிக்கும் 'பராசக்தி'
'பராசக்தி' படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்தேன். கடந்த 1964ம் ஆண்டு என படம் துவங்குகிறது. கடந்த 1964ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாயம் ஆக்கியது போலவும், அதை அன்றைக்கு தி.மு.க., எதிர்த்தது போலவும், அதில் படமாக்கப்பட்டு உள்ளது. மறப்போம்; மன்னிப்போம். ஆனால், இந்த படம் தி.மு.க., - காங்கிரஸ் உறவை பிரிப்பது போல் உள்ளது. பா.ஜ.,வின் ஆதரவு பெற்ற தணிக்கை குழு, பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சிக்கல்கள், வலிகள்?
- அருள் அன்பரசு, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,
- நமது நிருபர் -

