கவர்னர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ., சட்டபூர்வமாக்குவதா? மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி
கவர்னர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ., சட்டபூர்வமாக்குவதா? மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி
UPDATED : மே 16, 2025 05:11 AM
ADDED : மே 16, 2025 01:42 AM

சென்னை : 'உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், ஜனாதிபதி வாயிலாக, மத்திய அரசு விளக்கம் கேட்பது கண்டிக்கத்தக்கது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக கவர்னர் ரவி தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ளது. இந்த விவகாரத்தில், அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில், ஜனாதிபதி வாயிலாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதன் வாயிலாக, கவர்னர் ரவி, பா.ஜ., துாண்டுதலில்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது. இது, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் ஏஜன்டுகளாக கவர்னர்களின் கட்டுப்பாட்டில் வைத்து, அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சி அன்றி வேறில்லை.
இது, சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்பு சட்டத்தை பொருள் கொள்வதில் இறுதி தீர்ப்பளிக்கும் உரிமை கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கும் நேரடியாக சவால் விடுக்கிறது. கவர்னர்கள் முடுவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படுவதில், எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்?
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதன் வழியாக, கவர்னர்களின் முட்டுக்கட்டையை, பா.ஜ., சட்டப்பூர்வமாக்க முயல்கிறதா?
உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், அரசியலமைப்பு சட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜ., அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக, சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். ஒட்டுமொத்த ஆற்றலை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.