புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் பச்சை பட்டாணிக்கு தடை வருமா?
புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் பச்சை பட்டாணிக்கு தடை வருமா?
ADDED : மார் 10, 2025 09:06 AM

பெங்களூரு: செயற்கை ரசாயனம் கலந்த பச்சை பட்டாணியை தடை செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் சீனிவாஸ், அரசிடம் பரிந்துரை செய்து உள்ளார்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சோதனை நடத்தினர். பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இட்லியை சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், பிளாஸ்டிக் தாளில் இட்லி வேக வைக்க கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து தர்பூசணி பழங்கள், காய்கறிகள், பச்சை பட்டாணி, தந்துாரி, கபாப் போன்ற அசைவ உணவுகளிலும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை ரசாயனம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், கடந்த ஆண்டு இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது வரை சிவாஜி நகர், மெஜஸ்டிக், வி.வி.புரம், கோரமங்களா உட்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் செயற்கை ரசாயனம் கலந்த அசைவ உணவுகளே விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், நகரில் உள்ள பல கடைகளில் இருந்து, சேகரித்த பச்சை பட்டாணிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் குறித்து, உணவு பாதுகாப்ப துறை ஆணையர் சீனிவாஸ் கூறியதாவது: பச்சை பட்டாணியில் செயற்கை ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், மஞ்சள் நிற ரசாயனமான பிரில்லியன்ட் ப்ளூ, டெட்ராசின் உள்ளிட்ட ரசாயனம் கலக்கப்பட்டு உள்ளன. இந்த ரசாயனம் கலந்ததை உட்கொண்டால், எலும்பு பலவீனம், சக்தி இழப்பு, உடல் சோர்வு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். இதனால், ரசாயனம் கலந்த பச்சை பட்டாணியை தடை செய்ய வேண்டும், என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடும் நடவடிக்கை
செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள் குறித்து பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கலப்படமான உணவு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் உணவுகளில் ரசாயனத்தை கலந்து விற்கின்றனர். சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினேஷ் குண்டுராவ்,
அமைச்சர், சுகாதார துறை