கெஜ்ரிவால் மனைவியால் அனுதாப ஓட்டு கிடைக்குமா? : நம்பிக்கையில் ஆம் ஆத்மி தலைவர்கள்
கெஜ்ரிவால் மனைவியால் அனுதாப ஓட்டு கிடைக்குமா? : நம்பிக்கையில் ஆம் ஆத்மி தலைவர்கள்
ADDED : ஏப் 28, 2024 12:15 AM

மோசடி வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி நேற்று முதல் பிரசார களத்தில் இறங்கியுள்ள நிலையில், அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நம்புகின்றனர்.
லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தலைநகர் டில்லியில் உள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கு மே, 25ல் நடக்கும் ஆறாவது கட்டத்தில் ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.
டில்லியில் உள்ள, ஏழு தொகுதிகளில், நான்கில் ஆம் ஆத்மியும், மூன்றில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் போட்டியிடுகின்றன.
ஏற்கனவே கட்சியின் பல மூத்த தலைவர்கள், மதுபான ஊழல் மோசடி வழக்கில் சிறையில் உள்ளனர்.
இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இணைந்துள்ளார். எப்படியாவது ஜாமின் வாங்கி, அவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது.
ஆனால், ஜாமின் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன், அவர்களுடைய அனுதாபத்தை பெறுவது சிறப்பாக அமையும் என்பதால், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை, தேர்தல் களத்தில், அந்த கட்சி இறக்கிஉள்ளது.
டில்லியில் நேற்று அவர் ரோடு ஷோ நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து, அத்தொகுதிக்கு உட்பட்ட கோண்ட்லி என்ற பகுதியில் நடந்த ரோடு ேஷாவில் சுனிதா பங்கேற்றார்.
திறந்த ஜீப்பில் வந்த அவர், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இது, அவர் பங்கேற்ற முதல் தேர்தல் பிரசார நிகழ்ச்சியாகும்.
அப்போது அவர் கூறுகையில், ''அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம். அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது. சர்வாதிகாரத்தை அகற்றி, ஜனநாயகத்தை காப்பாற்ற ஓட்டளிப்போம்,'' என்றார்.
டில்லி, குஜராத், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக, சுனிதா பிரசாரம் செய்வார் என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தன் கணவர் சிறையில் உள்ளபோதும், கட்சிக்காகவும், நாட்டுக்காகவும், தேர்தல் பிரசாரத்தில், சுனிதா ஈடுபட்டு உள்ள தாக, ஆம் ஆத்மி நிர்வாகிகள் புளங்காகிதம் அடைந்து சிலிர்த்து கொள்கின்றனர்.
மக்களிடம் நிச்சயம் அனுதாபம் ஏற்பட்டு, கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என, ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் நம்புகின்றனர். கெஜ்ரிவாலைப் போலவே, சுனிதாவும், ஐ.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை துறை அதிகாரியாவார். கடந்த, 2016ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகே, அவர் அதிகளவில் பொது நிகழ்ச்சிகளில் தென்படத் துவங்கினார்.
- நமது சிறப்பு நிருபர் -

