sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/'நார்மலைஸ்' செய்வது அரசியலில் வெற்றி தருமா?

'நார்மலைஸ்' செய்வது அரசியலில் வெற்றி தருமா?

'நார்மலைஸ்' செய்வது அரசியலில் வெற்றி தருமா?


ADDED : மார் 10, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர், pattamvenkatesh@gmail.com

சமீபத்தில், வித் லவ் மற்றும் டிராகன் ஆகிய திரைப்படங்கள், ஓ.டி.டி.,க்கு வந்த பின் தான் அவற்றை பார்த்தேன். வழக்கம்போல் காதல், திருமணத்தில் முடிய வேண்டும்; ஆணும் பெண்ணும் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான், இந்தப் படங்களின் மையக் கரு. இது, ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் சாகாவரம் பெற்ற உள்ளடக்கம்.

அதில் எந்தப் பாத்திரம் நடித்தாலும், புதிய நடிகர்களாக இருந்தாலும், அவர்கள் இணைய வேண்டும் என்ற ரசிக மனப்பான்மை அல்லது நம் உள்ளார்ந்த பண்பாடு எதிர்பார்ப்பு நிறைவேறும்போது, படம் மனதுக்கு பிடித்துவிடும். அந்த திரைப்படங்கள் 'பாக்ஸ் ஆபீஸ்' வெற்றிகளாகவும் மாறிவிடும்.

மேலே சொன்ன இரண்டு படங்களும் இந்த விஷயத்தில் வெற்றி பெறுகின்றன. ஆனால், நான் பேச வந்தது இன்னொரு அம்சம். இவை மட்டுமல்ல; இவை போன்று, சமீபத்தில் வெளியான பல படங்களில், இதுவரை தவறு என்று கருதப்பட்டிருந்த ஒருசில வாழ்வியல் அம்சங்கள், இயல்பு நிலைகளாக, அதாவது, 'நார்மலான' அம்சங்களாக மாற்றப்படுகின்றன.

இயல்புநிலை

வித் லவ் திரைப்படத்தில் காதலி, தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து, காதலன் தங்கியிருக்கும் வீட்டுக்கு மாறி விடுகிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில் இருவரும் சேர்ந்து, 'பார் - கம் - டான்ஸ் கிளப்'பில் மது அருந்துகின்றனர். அடுத்த காட்சியில் இருவரும் படுக்கையை பகிர்ந்து கொள்கின்றனர்.

மறுநாள் காலை இருவரும் காரில் போகும்போது, நேற்று இரவு நடைபெற்றதற்காக நாணி கோணிக்கொண்டு காதலன் வெட்கப்பட, அந்தக் காதலியோ, 'நாம் குடித்திருந்தோம், வேறு அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதே' என்கிறார்.

டிராகன் திரைப்படத்தில், வேலை இல்லாமல் இருக்கும் காதலன், நண்பர்கள் இருக்கும் அறையில், இரவு வேளையில் தன் காதலியை அழைத்துக்கொண்டு தங்குவதாக சித்தரிக்கப்படுகிறது.

இதிலும், திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஒரு பெண், தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆணை எடை போடுவதற்கு, இரவு மது பார் ஒன்றுக்கு அவரை அழைக்கிறார். அங்கே அந்தப் பெண் மது அருந்துகிறார்; ஆண் மது அருந்தவில்லை.

இவையெல்லாம் என் கண்ணில் பட்டு, கருத்தைக் கவர்ந்தவை. ஆனால், இவையெல்லாம் கதையின் போக்கில் நடைபெறும் காட்சிகள். எங்கும் இதற்கான அழுத்தம் இல்லை.

அழுத்தம் கொடுக்காமல் அந்தக் காட்சியை நடத்தி செல்வதன் வாயிலாக, இது தான் இன்றைய இளைஞர்களுடைய வாழ்க்கையில் சகஜமாக நடைபெற்று வருகிறது என்று இயக்குநர்கள் மறைமுகமாக சொல்லி செல்கின்றனர்.

இது தான் 'இயல்புநிலை' என்று ரசிகர்களை நம்ப வைக்கின்றனர்; ஏற்க வைக்கின்றனர். அவர்களுடைய அடிமனதில் பதிய வைக்கின்றனர்.

காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதா என்ற நம் ரசிக பரபரப்பில், நடுவே விதைக்கப்படும் விஷ விதைகள் இவை. நாம் மெல்ல மெல்ல மதுவையும், போதையையும், திருமணத்துக்கு முன் படுக்கை பகிர்தலையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள பழகுகிறோம் அல்லது பழக்கப்படுகிறோம்.

இதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் வாருங்கள். த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய், ஒரு திருமண வரவேற்புக்கு, தன் தோழியும் நடிகையுமான திரிஷாவோடு செல்கிறார். வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்ற வீடியோ, விருப்பத்துடன் பரப்பப்படுகிறது. அதன் பின், சமூக வலைதளங்கள் அனைத்திலும் இதை பற்றி தான் பேச்சு.

என்ன பேசுகின்றனர் என்று கூர்ந்து கவனித்தால், மேலே பார்த்த 'நார்மலைசேஷன்' இங்கும் தொடர்வதை பார்க்கலாம். ஏதோ ஓர் ஊரில் ஒரு சின்ன பெண், த.வெ.க., கட்சியைச் சேர்ந்தவர்; தீவிர விஜய் ரசிகையாக இருப்பவர்.

அமெரிக்காவுல சகஜம்

அவர் சொல்கிறார்... 'குப்பை பொறுக்குறவன் கூட ரெண்டு பொண்டாட்டி வெச்சிருக்கான்; கூட்டறவ நாலு புருஷன் வெச்சிருக்கா; காசு இல்லாதவன் கூட, 10 பொண்டாட்டியோட ஜாலியா வாழறான்.

'என் கிட்ட காசு இருக்கு... நான் வெச்சுக்குவேன், வெச்சுக்காம போவேன். உனக்கென்ன... அரசியல் தானே, ஓட்டு தானே? ஓட்டுக்குள்ள வெச்சு சமாளிக்கணும். இது சீக்ரெட் மேரேஜ் தான். நமக்கு ஒண்ணுமில்ல' என்கிறார்.

இன்னொரு வீடியோவில், வேறொருவர் சொல்கிறார், 'அண்ணனும் ஆம்பள தானே... அவருக்கும் உணர்ச்சி இருக்குமில்ல. சங்கீதா வேற இல்ல...' தொடர்ந்து அவர் பேசியதை எழுதினால், இதழ் ஆசிரியர் சிவப்பு பேனா கோடு கிழித்துவிடும்.

'அவங்க இருவரும் நண்பர்கள்... அவங்க பர்சனல் விஷயத்துல தலையிட நமக்கு என்ன உரிமை, அதிகாரம் இருக்கு? எம்.ஜி.ஆரையோ, கருணாநிதியையோ இப்படி கேள்வி கேட்டிருக்கீங்களா?' என்பது இன்னொரு தரப்பு வாதம்.

'அமெரிக்காவுல எல்லாம் இது ரொம்ப சகஜம். அங்க யாராவது கேள்வி கேக்கறாங்களா?' - இது இன்னொரு குரல்.

விஜய் நடவடிக்கைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொழிப்புரை எழுதிக் கொண்டிருக்கின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோவைப் பயன்படுத்தி, மீம்ஸ் போட்டு, அவரை கொச்சைப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் தயங்கவில்லை.

'சங்கி' மனப்பான்மை

எல்லாவற்றுக்கும் அடிப்படையில், ஒரு பிரச்னை இருக்கிறது. நம் இந்திய சமூகத்தில் உள்ளார்ந்து இருக்கும் ஒழுக்க உணர்வை, அற உணர்வை, குடும்ப மதிப்பீடுகளை முனை மழுங்கச் செய்யும் போக்கின் வெளிப்பாடு இது.

இந்த மதிப்பீடுகளை எடுத்துப் பேசுவதும், வலியுறுத்துவதும் காலமாற்றத்தோடு ஒத்துப் போகாத பத்தாம்பசலித்தனம், பிற்போக்குத்தனம். 'சங்கி' மனப்பான்மை. 'நியாய தராசைத் துாக்கிக்கொண்டு வருவதற்கு நீ யார்?' என்பதும், இதன் இன்னொரு குண்டாந்தடி.

அமெரிக்காவில் கூட, தனி நபர்கள் வாழ்க்கையை எவரும் விமர்சிப்பதில்லை. எப்போது அவர் பொது வாழ்க்கைக்கு வருகிறாரோ, அப்போதே அவரது குடும்பமும், வாழ்க்கை முறையும் அனைவராலும் கண்காணிக்கப்படும்.

இத்தனை ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களை கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். ஒவ்வொருவரும் தத்தமது மனைவியரோடு, பிள்ளைகளோடு தான் காட்சியளிப்பர். அதைத் தான் அந்த நாட்டு வாக்காளர்களும் விரும்புவர்.

இது தான் உலகளாவிய சிந்தனையாக இருக்கிறது. ஆனால், இயல்பில்லாதவற்றை இங்கே, 'இயல்பு'களாக காட்ட முயல்கின்றனர். திரைப்படங்களில் வேண்டுமென்றால், அது வெற்றியை ஈட்டித் தரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us