இடைத்தேர்தலை புறக்கணிக்குமா பாமக? தீவிர முயற்சியில் தவெக
இடைத்தேர்தலை புறக்கணிக்குமா பாமக? தீவிர முயற்சியில் தவெக
ADDED : செப் 17, 2026 06:02 AM

சென்னை: வரும் அக்., 6ம் தேதி நடக்க உள்ள, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், த.வெ.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - கம்யூ., கட்சிகள் என, ஐந்து முனை போட்டி உருவாகி உள்ளது. இதனால், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே, கட்சிகள் வெற்றியை கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., ஆதரவுடன், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இத்தொகுதியில் வன்னிய சமுதாய ஓட்டுகள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. பா.ம.க., ஆதரவை பெறும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என கூறப்படுகிறது.
எனவே, பா.ம.க.,வை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியை, த.வெ.க., தலைமை தொடங்கியது. ஆனால், பா.ம.க., பிடிகொடுக்கவில்லை. அதே நேரத்தில், த.வெ.க., கூட்டணியில் உள்ள வி.சி.க., எதிர்ப்பு தெரிவித்தது.
அ.தி.மு.க., தரப்பில், பா.ம.க., ஆதரவை மீண்டும் பெற பேச்சு நடந்து வருகிறது. அதற்கும் பா.ம.க., தலைமை பதில் தராமல் அமைதி காக்கிறது.
இந்நிலையில், பா.ம.க., இடைத்தேர்தலை புறக்கணித்தால், அதன் ஓட்டுகளை எளிதாக கைப்பற்றலாம் என, த.வெ.க., தலைமை கணக்கு போடுகிறது. அதற்காக, பா.ம.க.,வை இடைத்தேர்தலை புறக்கணிக்க வைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது.
இதற்காக, பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவியும், அக்கட்சி எம்.எல்.ஏ.,வுமான சவுமியா வாயிலாக, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதன் விளைவாக, இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவிற்கு பா.ம.க., வந்து விட்டதாக, த.வெ.க., தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு கைமாறாக, உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க.,வுக்கு உதவுவதாக, த.வெ.க., தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
