ரெகுலர் மாணவர் சேர்க்கை கட்டாய கல்வி பிரிவுக்கு மாற்றமா? பெற்றோர் ஏமாற்றம்; தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
ரெகுலர் மாணவர் சேர்க்கை கட்டாய கல்வி பிரிவுக்கு மாற்றமா? பெற்றோர் ஏமாற்றம்; தனியார் பள்ளிகள் எதிர்ப்பு
UPDATED : அக் 05, 2025 01:20 AM
ADDED : அக் 04, 2025 06:46 PM

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் வழக்கமாக சேர்ந்த மாணவர்களை, ஆர்.டி.இ., எனப்படும், கட்டாய கல்வி உரிமை பிரிவுக்கு மாற்றி, அவர்கள் செலுத்திய கட்டணத்தை பெற்றோருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்ற, கல்வித்துறை உத்தரவால் தனியார் பள்ளிகள் அதிருப்தியடைந்துள்ளன.
தேசிய கல்வி கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளி கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், தமிழகத்திற்கான மத்திய அரசின், ஆர்.டி.இ., எனப்படும், கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இதனால், இந்த கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., சேர்க்கை தமிழகத்தில் நடக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டதன் எதிரொலியாக, மத்திய அரசு அதற்கான நிதியை விடுவித்தது.
இதையடுத்து, ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கையை துவக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அந்தந்த பள்ளிகளில் ரெகுலராக பணம் செலுத்தி படித்து வரும் மாணவர்களில், 25 சதவீதம் பேரை அதிலிருந்து வெளியேற்றி, ஆர்.டி.இ., மாணவர் சேர்க்கையாக காண்பித்து, அவர்கள் செலுத்திய கட்டணத்தை பெற்றோருக்கு திரும்ப தரக் கோரியும், அத்தொகையை பள்ளிகளுக்கு அரசு வழங்கும் என்றும், தனியார் பள்ளிகளை கல்வித்துறை கட்டாயப்படுத்துகிறது.
ஏமாற்று வேலை மத்திய அரசை காரணம் காட்டி ஆர்.டி.இ., சேர்க்கையை மேற்கொள்ளாமல், தனியார் பள்ளிகள் குறுக்கு வழியில் சென்று, ஆர்.டி.இ., சேர்க்கையாக காண்பிப்பது ஏமாற்று வேலை.
இதனால், இச்சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:
கடந்த, 2025 - 2026ம் கல்வியாண்டிற்கான ஆர்.டி.இ., சேர்க்கை, மத்திய அரசின் நிதி வராததால், தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. வழக்கு முடிந்து எப்படியும் சேர்க்கை நடக்கும் என, 75,000 குழந்தை கள் ஆர்.டி.இ., சேர்க்கையில் விண்ணப்பிக்க காத்திருக்கின்றனர்.
இவர்களில் சிலர் அரசு அங்கன்வாடிகள், பிளே ஸ்கூல்களிலும், சிலர் எங்கும் சேராமல் வீடுகளிலும் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் முடிவு பேரிடியாக உள்ளது.
அதேநேரம் தனியார் பள்ளிகளும் நுழைவு வகுப்புகளில், 25 சதவீதம் மாணவர் சேர்க்கை கிடைக்கும் என்று காத்திருந்தன.
ஆனால், தனியார் பள்ளிகளை தண்டிக்கும் வகையில், ஏற்கனவே ரெகுலரில் கட்டணம் செலுத்தி சேர்ந்த மாணவர்களை, அதிலிருந்து வெளியேற்றி, அவர்களை ஆர்.டி.இ., சேர்க்கை போல காண்பிக்கவும், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பள்ளிகள் திரும்ப வழங்க வேண்டும் என்றும், ஒரு குழப்பமான உத்தரவை வெளியிட்டுள்ளது.
நடவடிக்கை ஆர்.டி.இ., திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியே ஆகவேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டதால், எங்கள் பள்ளிகளில் நாங்களே சேர்த்த மாணவர்களை ஆர்.டி.இ., திட்டத்தில் மாற்றி எமிஸில் பதிவிட வேண்டும் என்று கல்வித்துறை கட்டாயப்படுத்துகிறது.
இதனால், தனியார் பள்ளிகளுக்கு நிதியிழப்பு ஏற்படும். அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். கடந்தாண்டு போல் பொது அறிவிப்பு வெளியிட்டு ஆர்.டி.இ., சேர்க்கையை வழக்கம் போல மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -