UPDATED : ஆக 23, 2024 12:27 PM
ADDED : ஆக 23, 2024 03:56 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அதிக அச்சுறுத்தல் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை, தமிழக போலீசார் உஷார்படுத்துவதோடு, அவர்களுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துவர். அச்சுறுத்தல் நீங்கினால், போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும்.
அந்த வகையில் தான், முன்னாள் கவர்னர் தமிழிசை, மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோருக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
திருமாவளவனின் சமீபத்திய பேச்சுக்களால், அவருக்கு அச்சுறுத்தல் அதிகமாகி இருக்கும் தகவல், உளவுத் துறை போலீசாருக்கு கிடைத்திருக்கிறது. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும், திருமாவளவனுக்கு தற்போது வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
- நமது நிருபர் -

