காங்கிரஸ் வெளியேறுமா; 'சீட்' காலியாகுமா? இலவு காத்த கிளியாக காத்திருக்கும் தே.மு.தி.க.,
காங்கிரஸ் வெளியேறுமா; 'சீட்' காலியாகுமா? இலவு காத்த கிளியாக காத்திருக்கும் தே.மு.தி.க.,
ADDED : ஜன 22, 2026 05:16 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறிய பின், அக்கூட்டணியில் இணைந்தால், தங்களுக்கு கூடுதல் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இலவு காத்த கிளியாக தே.மு.தி.க., காத்திருக்கிறது.
தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுப்பதற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., என இரு தரப்பிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., தரப்பில் எட்டு தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 21 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், ஒரு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என, தே.மு.தி.க., தரப்பில் பேரம் நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க., கூட்டணியில் ஏழு சீட் வரை தருவதாக பிரேமலதாவிடம் உறுதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 10 சட்டசபை தொகுதியுடன், ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என, பிரேமலதா தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், இது குறித்து, காங்கிரஸ் மேலிடம் முடிவை அறிவிக்காமல் உள்ளது. ஒருவேளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், த.வெ.க.,வுடன் கூட்டணி என அறிவித்து விட்டால், தி.மு.க., கூட்டணியில் தங்களுக்கு கூடுதல் சீட் கிடைக்கும் என பிரேமலதா நம்புகிறார்.
அந்த ஆசையில், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். பிரதமர் மோடி நாளை மதுராந்தகத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதில், கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பா.ஜ.,வில் இருந்து சிலர் நேற்று பிரேமலதாவிடம் பேச்சு நடத்தியதாக தகவல் வெளியானது; ஆனால், அதை பிரேமலதா மறுத்து விட்டார். காங்கிரஸ் முடிவை எதிர்பார்த்து, தே.மு.தி.க., காத்திருக்கிறது.

