/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
1 சாராயக்கடை, 2 கள்ளுக்கடை ஏலம்
/
1 சாராயக்கடை, 2 கள்ளுக்கடை ஏலம்
ADDED : ஜூலை 04, 2024 03:31 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடந்த 4ம் நாள் கலால் துறை ஏலத்தில் காரைக்காலில் ஒரு சாராயக்கடை, புதுச்சேரியில் இரு கள்ளுக்கடைகள் ஏலம் போனது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன. சாராய கடைகளுக்கு மாத கிஸ்தி தொகை நிர்ணயிக்க 3 ஆண்டிற்கு ஒரு முறை கலால் துறை மூலம் பொது ஏலம் விடப்படும்.
அதன்படி, கடந்த 29ம் தேதி கலால் துறை மூலம் மின்னணு முறையில் பொது ஏலம் விடப்பட்டது. முதல் நாள் ஏலத்தில் சாராயக்கடைகள் ஏலம் போகவில்லை. 14 கள்ளுக்கடைகள் மட்டும் ஏலம் போனது.
இதனால் 2வது நாள் ஏலத்தில் சாராயக்கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைத்து ஏலம் விடப்பட்டது.
அதிலும் ஏலம் எடுக்க சாராயக்கடை வியாபாரிகள் முன்வரவில்லை. அன்று 9 கள்ளுக்கடைகள் மட்டும் ஏலம்போனது. நேற்று முன்தினம் 3வது நாள் 10 சதவீதம் கிஸ்தி தொகை குறைத்து விடப்பட்ட ஏலத்திலும் சாராயக்கடை ஏலம் போகவில்லை. 2 கள்ளுக்கடைகள் ஏலம் போனது.
4வது நாளான நேற்று சாராய கடை கிஸ்தி தொகை 15 சதவீதம் குறைத்து ஏலம் விடப்பட்டது.
இதில், காரைக்கால் மாவட்டம் பூந்தோட்டம் சாலையில் உள்ள சாராயக்கடை ரூ. 17.15 லட்சத்திற்கு ஏலம் போனது. அதுபோல் குமரகுருபள்ளம் கள்ளுக்கடை ரூ. 19,498 க்கும், ஏம்பலம் கள்ளுக்கடை ரூ. 66,000க்கு ஏலம் போனது. 4வது நாள் ஏலம் முடிவில் மொத்தம் 1 சாராயக்கடை, 27 கள்ளுக்கடைகள் ஏலம் போனது. இன்று 20 சதவீதம் கிஸ்தி தொகை குறைத்து ஏலம் நடக்கிறது.