ADDED : ஜூலை 04, 2026 09:21 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே கார் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்தனர்.
திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 48; இவர் திண்டிவனம் சேடன்குட்டைத் தெருவில் உள்ள தனியார் பள்ளி வேன் ஓட்டுனராக உள்ளார்.
இவர் நேற்று காலை மேக்ஸிமோ மினி வேனில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். சாரம் பஸ் நிலையம் அருகே நேற்று காலை 8:35 மணியளவில், சென்னை – திண்டிவனம் சாலையில் வருவதற்காக யூ டர்னில் திரும்பியுள்ளார்.
அப்போது, சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஸ்விப்ட் கார், வேன் மீது மோதியது .இதில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மாணவர்கள் சாரத்தை சேர்ந்த மோனிஷ்கார்த்திக், 7; ரோகித்சந்தர், 5; டிரைவர் மகன் சந்தோஷ், 14; ஸ்ரீதர்ஷன், 5; மோனிஷா, 7; தருனேஷ், 9; உட்பட 13 பேர் மற்றும் டிரைவரும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
