ADDED : மே 27, 2026 10:04 PM
கடலுார்: வியாபாரி வீட்டில் வெள்ளிப்பொருட்கள், பணம் திருடிய இரண்டு பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் பாதிரிக்குப்பம், ஏ.டி.ஆர்.,நகரை சேர்ந்தவர் கண்ணன். நோட்டுப்புத்தக கடை வைத்துள்ளார். கடந்த 25ம் தேதி காலை கண்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றார். மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தபோது, பீரோவிலிருந்த வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர், குங்குமச்சிமிழ் உள்ளிட்ட, 455 கிராம் வெள்ளிப்பொருட்கள், 4 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், கடலுார் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் தேவனாம்பட்டினம் போர்ட்மேன் தெருவை சேர்ந்த மோகன், 60; கரூர் மாவட்டம், பலாப்புரம், வாங்கல்ரோட்டைச் சேர்ந்த பாபு,50; ஆகியோர் என்பதும், கண்ணன் வீட்டில் வெள்ளி பொருட்கள், பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 455 கிராம் வெள்ளிப்பொருட்கள் மற்றும் 4ஆயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றினர்.
