ADDED : மே 13, 2024 04:51 AM
வானுார்: ஆரோவில் அருகே பைக்கில் சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த சிவபுரி, பைரவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன், 40; சிதம்பரம் பிச்சாவரத்தில் இறால் பண்ணை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு ஆரோவிலுக்கு வந்தவர், சொந்த ஊருக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார்.
வானுார் அருகே இடையஞ்சாவடி என்ற இடத்தில் வந்தபோது, 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 3 சவரன் செயின், 3,300 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி, கருவடிக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகனசுந்தரம், 42; செந்தில்குமார், 44; ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து மோகனசுந்தரம், செந்தில்குமார் இருவரையும் கைது செய்து, செயின் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.