/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
275 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
/
275 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்
ADDED : ஏப் 17, 2024 11:50 PM

பாகூர் : பாகூர் பகுதியில் 275 லிட்டர் மதுபானங்களை, போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையில் ஒப்படைத்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் சாராயக்கடையில் பாகூர் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது, விதியை மீறி சாராய பாக்கெட்டுகள், பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 180 எம்.எல் கொண்ட 1,031 சாராய பாக்கெட்டுகள், 500 எம்.எல் அளவு கொண்ட 24 சாராய பாட்டில்களும், சீலிங் மெஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்த தாமரைசெல்வன், 35; என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், பாகூர் போலீசார் ரோந்து சென்றபோது சோரியாங்குப்பம் வழியாக தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 90 எம்.எல்., அளவு கொண்ட 92 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, முள்ளோடையில் கலால் விதியை மீறி விற்பனை செய்யப்பட்ட 70 லிட்டர் மதுபனங்கள்ளை போலீசார் பறிமுதல் செய்து, சுள்ளியாங்குப்பத்தை சேர்ந்த செல்வராஜ் 65; என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 275 லிட்டர் மதுபானங்கள் கலால் துறையில் ஒப்படைக்கப்பட்டது.

