கொத்தனார் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
கொத்தனார் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : மே 23, 2026 11:32 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் கொத்தனாரை கத்தியால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் மேட்டு வீதியைச் சேர்ந்தவர் பவளராஜ் (எ) ராஜன், 26; கொத்தனார். இவர் மீது 3 அடிதடி வழக்குகள் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு லாஸ்பேட்டை நெருப்புக்குழி வாலிபால் மைதானத்தில் பவளராஜ், மர்ம நபர்களால் தலை மற்றும் முகத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற லாஸ்பேட்டை போலீசார் பவளராஜ் உடலை மீட்டு, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட பவளராஜிற்கும் செல்லப்பெருமாள்பேட்டையைச் சேர்ந்த பக்தவாசலம் மகன் பழனிமுருகன் (எ) சுல்லான், 23; லாஸ்பேட்டை நெருப்புக்குழியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் டோபிகானாவை சேர்ந்த பெருமாள் மகன் கமலேஷ் 20; என்பவர்களுக்கும் இடையே சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவது தொடர்பாக கடந்த 15 தினங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் 3 பேரும் பவளராஜை கொல்ல திட்டமிட்டு, கத்தி மற்றும் ஆயுதங்களை நெருப்புக்குழி மைதானத்தில் மறைத்து வைத்தனர். இதைத்தொடர்ந்து, 3 பேரும் பவளராஜிடம் சமாதானம் ஆகியது போல் நட்பாக பழகி மைதானத்திற்கு மது குடிக்க அழைத்து வந்தனர். தொடர்ந்து, மதுகுடிக்கும் போது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 3 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் ஆயுதங்களால் பவளராஜை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பழனிமுருகன், கமலேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பழனிமுருகன், கமலேஷ் ஆகியோரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.
