ADDED : ஏப் 13, 2024 04:31 AM
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம், வில்லியனுார் பகுதியில் கஞ்சா விற்ற சகோதரர்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
அரும்பார்த்தபுரம் திரு.வி.க. பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை பள்ளி அருகே சோதனையில் ஈடுப்பட்டனர்.
போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், வி.மணவெளி, கோவில் வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ், 19; என்பதும், கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் ஜேம்ஸிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார்
வில்லியனுார் ஜி.என்.பாளையம் அருகே உள்ள அம்மா நகர் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் அங்கிருந்த தப்பியோட முயன்ற இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், அம்மா நகரை சேர்ந்த சாமிக் கண்ணு மகன்கள் பிரகாஷ், 23; சரண்ராஜ், 21, என்பதும், இவர்கள் சென்னையில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, சில்லரையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் மதிப்பிலான 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

