இரவு நேரத்தில் லாரி டிரைவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
இரவு நேரத்தில் லாரி டிரைவரிடம் வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
ADDED : ஜூன் 24, 2024 05:38 AM

வில்லியனுார் : வில்லியனுாரில் இரவு நேரத்தில் லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் பைபாஸ் சாலை சிவகணபதி நகர் பகுதியில் வி.ஆர்.எல்., லாஜீஸ்டிக்ஸ் டிரான்ஸ்போர்ட் கொரியர் கம்பெனி உள்ளது. இந்நிறுவனத்தில் லாரி டிரைவராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பகவராஜ் மகன் சிவராஜ் யாளவார்,25; பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கம்பெனிக்கு லோடு இறக்க லாரியை ஓட்டிவந்தார், பைபாஸ் சாலையில், தனியார் மதுபான கடை எதிரே நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சிவராஜ் யாளவார் இறங்கினார்.
அப்போது வி.ஆர்.எல்., நிறுவன மேலாளாராக வேலை செய்துவரும் மூலகுளம் மோதிலால் நகரை சேர்ந்த சிவராஜ் மகன் சந்தோஷகுமார் அவ்வழியாக பைக்கில் வந்துள்ளார். கம்பெனி லாரி நிற்பதை பார்த்து டிரைவரை தேடினார்.
அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் இருள் சூழ்ந்த பகுதியில் டிரைவரை பிடித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். சந்தோஷகுமார், டிரைவரை மீட்டு கூச்சலிட்டு, மர்ம கும்பலை துரத்தினார். வழியில் இருந்தவர்கள் கும்பலை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார்,பிடிபட்ட நான்கு பேரையும் ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் சேதராப்பட்டு முத்தமிழ் நகர் சுப்ரமணி மகன் சுபாஷ்,25; கணுவாப்பேட்டை புதுநகர் ராமு மகன் ரஞ்சித்குமார்,22; சுரசூர், புதுகாலணி சுரேஷ் மகன் சுனில்,23; கடப்பேரிக்குப்பம் கஜேந்திரன் மகன் மனோஜ்,20; என தெரியவந்தது.
இவர்கள் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டதும், சுபாஷ் மீது சேதராப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கும், அரியாங்குப்பம் ஸ்டேஷனில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து வில்லியனுார் போலீசார், பிடிபட்டவர்களிமிருந்து இரு பைக்குகள், ஒரு வீச்சறிவால், ரூ. 500 ஆகியவற்றை பறிமுதல் செய்து, கோர்ட்டில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
