சர்வதேச மையத்திற்கு எதிராக பா.ம.க., போராடும்: தங்கர்பச்சான்
சர்வதேச மையத்திற்கு எதிராக பா.ம.க., போராடும்: தங்கர்பச்சான்
ADDED : ஏப் 29, 2024 04:04 AM
வடலுார் : வடலுார் பெருவெளியில் சர்வதேச மையம் அமைத்தால் பா.ம.க., போராடும் என, அக்கட்சியின் கடலுார் லோக்சபா வேட்பாளர் தங்கர்பச்சான் பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் நேற்று, வடலுார் பார்வதிபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசியதாவது:
நெய்வேலியில், 44 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய என்.எல்.சி., 32 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளது. அதில், தமிழக அரசுக்கு, 6,600 கோடி அளித்துள்ளது. ஆனால், நிலம் அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
மாற்று குடியிருப்பு பட்டா, 60 ஆண்டிற்கு பின் 300 பேருக்கு மட்டும் கண்துடைப்புக்காக வழங்கினர். ஆனால், 1000 பேரை வெளியேற்றினர். வேலையில் ஒப்பந்த பணியாளர்களாக மட்டுமே அமர்த்தி உள்ளனர். மேலும் 24 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சர்வதேச மையம் அமைப்பதை எதிர்க்கும் பார்வதிபுரம் மக்கள் தான், சத்திய ஞான சபை அமைய நிலம் வழங்கினர். பார்வதிபுரம் மக்களின் ஆதரவோடு பா.ம.க., அரசியல் ரீதியாக போராடும்.
வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க வேண்டாம் என்பதுதான் எங்களுடைய கருத்தாகவும் உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இப்பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
