ADDED : மே 20, 2026 06:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மாசுக்கட்டுப்பாடு குழுமம், சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டம், பாண்டிச்சேரி தேனீ வளர்ப்பு கூட்டுறவு சங்கம் சார்பில் உலக தேனீ தினத்தை முன்னிட்டு 5 கிலோ மீட்டர் துார விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடந்தது.
கடற்கரை சாலையில் நடந்த விழிப்புணர்வு மாரத்தானை மாசுக் கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் வரவேற்றார். மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஷ்குமார் வாழ்த்தி பேசினார். அறிவியல் தொழிலற்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாடு குழுமத்தின் அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே துவங்கிய விழிப்புணர்வு மாரத்தான், ரயில் நிலையம், அண்ணா சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையை வந்தடைந்தது.
இதில், தேசிய நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என 453 பேர் கலந்து கொண்டனர்.
