ADDED : ஆக 05, 2026 11:51 PM
புதுச்சேரி: ஜிப்மரில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலக தாய்ப்பால் வாரம், இந்தாண்டு நிலையான வாழ்க்கை தொடக்கத்திற்காக தாய்ப்பால் என்ற கருப்பொருளின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, ஜிப்மர் செவிலியர் கல்லுாரி செவிலியர் துறை, பச்சிளம் குழந்தைகள் நலத்துறை, குழந்தைகள் நலத்துறை மற்றும் மகப்பேறு-மகளிர் நோயியல் துறைகள் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாரம்பரிய கலை வடிவமான வில்லுப்பாட்டு மூலம் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தொடங்குவதன் அவசியம். முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும். இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் சத்தான துணை உணவுகளை வழங்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
மேலும் ஊட்டச்சத்து முறை, சுகாதாரக் கல்வி குறித்தும் கலந்துரையாடல் நடந்தது. நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள், அவர்களது உறவினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
