தலையில் கல்லைபோட்டு கொத்தனார் கொலை கடலுாரில் பயங்கரம்: பக்கத்து வீட்டுக்காரர் கைது
தலையில் கல்லைபோட்டு கொத்தனார் கொலை கடலுாரில் பயங்கரம்: பக்கத்து வீட்டுக்காரர் கைது
ADDED : ஜூன் 12, 2026 05:51 PM
கடலுார்: கடலுாரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் ராஜி,42; கொத்தனார். இவர் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவி சவுந்தர்யாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவர் குடித்து விட்டு வீட்டு வாசலில் சவுந்தர்யாவை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பசாமி,43; என்பவர், ராஜியிடம் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்தால் அருகில் உள்ளவர்கள் எப்படி வசிக்க முடியும் எனக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கருப்பசாமி தனது வீட்டின் மாடிக்கு சென்று பூ வடிவிலான சிமெண்ட் கல்லை எடுத்து கீழே நின்றிருந்த ராஜியின் தலை மீது போட்டுள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ராஜி இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்த எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
