ADDED : ஆக 22, 2024 01:46 AM

பாகூர் : கார் மோதிய விபத்தில், படுகாயமடைந்த காங்., பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முருங்கப்பாக்கம் குயவர் வீதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 70; காங்., பிரசார குழு மாநில தலைவர். இவர் நேற்று தனது பைக்கில், அரியாங்குப்பத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் சென்றபோது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்தது.
அதன் மீது மோதாமல் இருக்க திருநாவுக்கரசு, பைக்கை திருப்பியபோது, அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த மகேந்திரா கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயமடைந்த அவரை, பொது மக்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.