ADDED : மே 29, 2026 07:02 PM
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதிவுலா நடந்து வருகிறது.
இதற்கிடையே, தீமிதி உற்சவத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை (31ம் தேதி) அம்மன் திருக்கல்யாண உற்சவம், வரும் 2ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
