ADDED : ஏப் 09, 2024 05:14 AM

புதுச்சேரி: வில்லியனுார் யாழ் அரங்கம் சார்பில் உலக நாடக தின விழா கொண்டாடப்பட்டது.
வில்லியனுார் தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் நாடக நிகழ்வுகளைத் தயாரித்து மேடையேற்றுதல், நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல், நாடக வாசிப்பு மற்றும் கலந்துரையாடல், நாடகம் தொடர்பான ஆவணப்படங்கள் திரையிடல், நாடகப் புத்தகங்கள் வெளியீடு போன்ற ஆக்கப்பூர்வப் பணிகளைச் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, உலக நாடக தின விழாவையொட்டி, நேற்று யாழ் அரங்கம் மற்றும் ஆய்வு நிறுவனம் ஒருங்கிணைப்பில், தியேட்டர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சாமுவேல் பக்கெட் எழுதி, ராம் மொழிபெயர்த்த எப்போ வருவாரோ நாடகம் அரங்கம் கருத்தரங்கில் நடந்தது.
நாடகத்தைவசந்த் இயக்கியிருந்தார். நாடகத்தைப் பல்கலைக்கழக மாணவர்கள், நாடக ஆர்வலர்கள் என திரளாக கலந்து கொண்டு கண்டுகளித்தனர். யாழ் அரங்க இயக்குநர் கோபி பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை யாழ் அரங்கின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

