ADDED : பிப் 26, 2025 04:56 AM
புதுச்சேரி: மாணவனின் நினைவாற்றல் செயல் விளக்க நிகழ்வின்போது, சீட்டு கட்டுகளை தொட முதல்வர் ரங்கசாமி மறுத்தார்.
முதலியார்பேட்டை அனிதா நகர் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஷ்வா ராஜ்குமார். மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லுாரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் 4ம் ஆண்டு பயின்று வருகிறார்.
சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான நினைவாற்றல் போட்டியில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நியூயார்க் நகரில் ஆன்லைன் மூலம் நடந்த உலக அளவில் நினைவாற்றலை சோதிக்கும் மெமரி லீக் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், விஷ்வா ராஜகுமார் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.
சாதனை புரிந்த மாணவர் விஸ்வா ராஜ்குமர், சிவசங்கர் எம்.எல்.ஏ.,வுடன் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, விஷ்வா ராஜ்குமார் 13.50 வினாடிகளில் 80 இலக்க எண்களை மனப்பாடம் செய்து அசத்தியவர் என்பதை நிருபிக்கும் வகையில், சீட்டு கட்டு எண்களை சரியாக செல்லும் நிகழ்வை நிகழ்த்தி காட்ட சீட்டு கட்டுகளை முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்து கலக்க கூறினர்.
அதற்கு, சீட்டு கட்டுகளை தான் தொட மாட்டேன் என, சைகையால் மறுத்தார்.
உடனடியாக சபாநாயகர் செல்வத்திடம் சீட்டு கட்டு கொடுத்து கலப்பு செய்தனர். அதன் பின்பு சீட்டுகள் எண் வரிசையை மாணவர் விஷ்வா ராஜ்குமார் கூறி அசத்தினார்.
