/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் பவள விழா மலர் வெளியீடு
/
முதல்வர் பிறந்த நாள் பவள விழா மலர் வெளியீடு
ADDED : ஆக 04, 2024 04:27 AM

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, பவள விழா மலர் வெளியிடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்த நாள் விழா, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள என்.ஆர். காங்., அலுவலகத்தில் நேற்று மாலை கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இனிப்பு வழங்கினார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் தொகுத்துள்ள புத்தகமான 'மக்கள் முதல்வர் என்.ஆர் 75, பவள விழா' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை, கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான சபாபதி வெளியிட, முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம் பெற்றுக் கொண்டார்.
இந்த புத்தகத்தில், ரங்கசாமியின் சிறு வயது நிகழ்வுகள், அவரது குடும்பத்தினர், சமூக சேவை, மக்கள் பணி, அரசியல் பிரவேசம், புதிய கட்சி துவக்கம், அமைச்சராக, முதல்வராக அவர் செய்த சேவைகள், முக்கியமான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விபரங்கள் நேர்த்தியாக லட்சுமிநாராயணனால் தொகுக்கப்பட்டுள்ளது.
விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், ஆறுமுகம், பாஸ்கர், கட்சியின் செயலாளர் ஜெயபால், சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெய ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.