ADDED : மே 15, 2026 11:50 PM
பாகூர்: அரங்கனுார் கிராமத்தில் மின்னல் தாக்கியதில், தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. காலை 10 மணியளவில், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, அரங்கனுாரில் பேட் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இருந்த தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. அடுத்த நொடியே தென்னை மரம் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
மரத்தின் உச்சியில் தீ பிடித்து சருகுகள் எரிந்து தீப்பொறிகள் கீழே விழுந்தன. அக்கம் பக்கத்தில் வீடுகள், வைக்கோல் போர்கள் இருந்ததால், பொது மக்கள் பதட்டமடைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
