ADDED : மே 06, 2026 06:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில், உள்ள நுாலகத்தினை கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில், கலை பண்பாட்டு துறையின் மூலமாக நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கலெக்டர் குலோத்துங்கன், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர், பார்வையாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு தேவையான மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போதுமானதாக அமைத்து தர வேண்டும். பழைய புத்தகங்கள் மற்றும் நுால்களை கணினி மயமாக்கி, பராமரித்திடவும், அனைத்து வகையான புதிய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் இருந்திட வேண்டும் என, உத்தரவிட்டார்.
மேலும், கழிப்பறை வசதிகள், சுத்தமான குடிநீர், மின் விசிறிகள் மற்றும் போதிய வெளிச்சம் போன்றவை உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, நுாலகத்தை நன்கு பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து எந்த புகார்களும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
