UPDATED : மே 15, 2026 09:41 PM
ADDED : மே 15, 2026 09:22 PM

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்புத் திட்ட அலுவலகம் சார்பில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சுகாதார துறை வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திட்ட அதிகாரி முருகன் வரவேற்றார். துணை இயக்குனர் ரகுநாத், எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட அதிகாரி அருள் விசாகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் செவ்வேள் கூறுகையில், 'டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. இவை சுத்தமான தண்ணீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடியது. பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றி டயர், பானை, ஆட்டுறல், தேங்காய் மட்டை போன்ற தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்களை தண்ணீர் தேங்காமல் கவிழ்த்து வைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை துய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
ஊர்வலத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள் செந்தில் வேலவன், சேதுபதி, பத்மநாபன் மற்றும் பூச்சியியல் வல்லுநர் வினோத், சுகாதாரத் துறையின் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.
ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கம்பன் கலையரங்கில் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மகேஸ்வரி, மதிவதனன் உதவியாளர்கள் தயாளன், சரவணன் மற்றும் மலேரியா அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
