/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடராஜர் கோவிலில் சிவபுராணம் பாடிய தமிழின குருபீட அமைப்பினர் தீட்சிதர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
/
நடராஜர் கோவிலில் சிவபுராணம் பாடிய தமிழின குருபீட அமைப்பினர் தீட்சிதர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
நடராஜர் கோவிலில் சிவபுராணம் பாடிய தமிழின குருபீட அமைப்பினர் தீட்சிதர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
நடராஜர் கோவிலில் சிவபுராணம் பாடிய தமிழின குருபீட அமைப்பினர் தீட்சிதர்கள் எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : மே 05, 2024 05:48 AM

சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவிலில், சேலம் சத்தியபாமா அறக்கட்டளை தமிழின குரு பீடம் அமைப்பினர் சிவபுராணம் பாடியதற்கு, தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், வடலுார் சத்திய ஞான சபை வளாகத்தில், அரசு சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்பணி துவங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாம் தமிழர் கட்சியினர் நேற்று வடலுாரில் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சேலத்திலிருந்து சத்தியபாமா அறக்கட்டளை தமிழின குரு பீடம் அமைப்பினர், 60க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வந்தனர்.
முன்னதாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள், சித்சபை மீது ஏறி, சிவபுராணம் பாடினர். அப்போது, அங்கிருந்த கோவில் பொது தீட்சிதர்கள், சிவபுராணம் பாட அனுமதி இல்லை என, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்கள் பாடியே தீருவோம் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கோவிலில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையிலான போலீசார், தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, தமிழின குருபீட அமைப்பினர் சித்சபையில் ஏறி 10 நிமிடம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடினர்.
தரிசனம் முடித்து, வெளியே வந்த தமிழின குருபீட அமைப்பினர், வடலுார் புறப்பட முயன்றபோது கீழகோபுர வாயிலில், சிதம்பரம் நகர போலீசார் 39 பேரை கைது செய்தனர்.