பொய்யாக போக்சோ வழக்கு பதிந்ததாக விருதை டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை
பொய்யாக போக்சோ வழக்கு பதிந்ததாக விருதை டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை
ADDED : மே 29, 2026 09:22 PM
விருத்தாசலம்: பொய் வழக்கு போட்டு இருவரை போக்சோவில் கைது செய்துள்ளதாக கூறி, கிராம மக்கள் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பேரளையூர் ஆலந்துரை பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன், அவரது மருமகன் கார்த்திக். இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பேரளையூர் கிராமத்தில் கூல்ரிங்ஸ் பாட்டில், தண்ணீர் கேன் குடோன் வைத்து, அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது குடோன் அருகே உள்ள பெண்ணின் 13 வயது மகளிடம் வீரராகவன், கார்த்திக் இருவரும் தவறாக நடந்து கொண்டதாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் அப்பெண் புகார் அளித்தார். அதன்பேரில், கார்த்திக், வீரராகவன் ஆகிய இருவரையும் கடந்த வாரம் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று விருத்தாசலம் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீரராகவன், கார்த்திக் மீது முன்விரோதத்தில், பொய்யான புகார் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, தெரிவித்தனர். பின்னர், தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுக்குமாறு போலீசார் கூறினர். அதன்பேரில், கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
