பாதாள சாக்கடை பணிகளால் சிதைந்த இ.சி.ஆர்... வாகன ஓட்டிகள் கடும் அவதி
பாதாள சாக்கடை பணிகளால் சிதைந்த இ.சி.ஆர்... வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 05, 2026 07:11 PM

புதுச்சேரி: இ.சி.ஆரில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடைந்தும், சாலை சீரமைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி இ.சி.ஆரில் கொக்கு பூங்கா முதல் சிவாஜி சிலை வரை, இ.சி.ஆரில் ஒரு பகுதி பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. இப்பணிக்காக சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் குதறி போடப்பட்டுள்ளது. ராட்சத கழிவு நீர் தொட்டியும் அமைக்கப்பட்டது.
தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்திருந்தும், சாலை பள்ளங்கள் முறையாக மூடப்படாமலும், தார் சாலை அமைக்கப்படாமலும் கைவிடப்பட்டுள்ளது. இ.சி.ஆரில் தற்போது சிவாஜி சிக்னல், மடுவுபேட் மற்றும் கொட்டுப்பாளையம் சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள் முழு வீச்சில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
சிக்னல்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றாலும், குண்டும் குழியுமான சாலையால் வாகனங்களைச் சீராக நகர்த்த முடியாமல் ஓட்டிகள் திணறுகின்றனர். சாலையின் அகலமான பகுதி சேதமடைந்துள்ளதால், வாகனங்கள் குறுகிய சாலையில் ஒரே நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன.
சாலையைச் சீரமைத்து முழு அகலத்தையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால், ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் மூன்று சிக்கனல்களில் கடந்து சென்று போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும்.
பல கிலோ மீட்டர் நீளத்திற்குச் சாலை கந்தலாக கிடப்பது இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் காரணமாகி வருகிறது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள், இனியும் காலதாமதம் செய்யாமல் எஞ்சியுள்ள பாதாளசாக்கடை பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். இ.சி.ஆரில் போர்க்கால அடிப்படையில் தார் சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.
விபத்துகள் நிகழும் முன்பே நிர்வாகம் விழித்துக்கொண்டு, வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையை சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.
