ADDED : மே 07, 2024 04:04 AM
குள்ளஞ்சாவடி, : குள்ளஞ்சாவடி அருகே வாந்தி பேதி ஏற்பட்டு முதியவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் கிராமசத்தில் நேற்று முன்தினம் சிலருக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக இருக்கலாம் என கருதினர். இந்நிலையில், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் திருவேங்கடம், 65; நேற்று இறந்தார்.
அவர், கடந்த 5ம் தேதி குள்ளஞ்சாவடியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சாப்பிட்ட பிறகே வாந்தி பேதி ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால், அந்த திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டவர்கள் பீதியடைந்தனர்.
அதையடுத்து, குள்ளஞ்சாவடி, சின்னதானங்குப்பம், அணுக்கம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, வாந்தி பேதிக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.