இ.பி.எஸ்., – சி.வி.எஸ்., அணி அ.தி.மு.க.,வினர் குழப்பம்
இ.பி.எஸ்., – சி.வி.எஸ்., அணி அ.தி.மு.க.,வினர் குழப்பம்
ADDED : மே 23, 2026 11:50 PM
– நமது நிருபர்–: விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வில், இ.பி.எஸ்., – சி.வி.எஸ்., என இரு அணிகளாக, நிர்வாகிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஒன்றிய, நகர நிர்வாகிகள் சி.வி.எஸ்., தரப்புக்கு ஆதரவாக உள்ளதால், கட்சித் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சி.வி.சண்முகத்திற்கு பதிலாக, முன்னாள் நகர செயலாளர் பசுபதியை புதிய மாவட்ட செயலாளராக, பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.
புதிய செயலாளர் பசுபதி, கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, சி.வி.சண்முகம் தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது.
பசுபதிக்கு ஆதரவாக மாவட்ட துணைச் செயலாளர் சக்கரபாணி, ஒன்றிய செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, பக்தவச்சலம், ரவிவர்மன், முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், மருத்துவரணி செயலாளர் முத்தையன், வர்த்தக அணி செயலாளர் லட்சுமிநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் எம்.பி., ஏழுமலை, திண்டிவனம் நகர் மன்ற முன்னாள் துணைச் சேர்மன் முகமது ெஷரீப், நகர மன்ற கவுன்சிலர்கள் கோல்டு சேகர், கலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் இ.பி.எஸ்., தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 22 ஒன்றிய செயலாளர்களில், 3 பேர் மட்டுமே, இ.பி.எஸ்., அணிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவு நிலைப்பாட்டில், மீதமுள்ள 19 ஒன்றிய செயலாளர்கள், பெரும்பாலான நகர செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற கவுன்சிலர்கள் உறுதியாக உள்ளனர். இவர்களில், ஒரு சில நிர்வாகிகளிடம், கட்சியில் புதிய பதவி அளிப்பதாக கூறி, இ.பி.எஸ்., தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், பெரும்பாலான ஒன்றிய, நகர நிர்வாகிகள் சி.வி.எஸ்., தரப்புக்கு ஆதரவாக உள்ளதால், கட்சித் தொண்டர்களிடையே குழப்ப நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழு பிரச்னையில் இறுதியாக தீர்வு கிடைத்தவுடன், தங்களது முடிவை தெரிவிப்பதாக நடுநிலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
